ஆந்திரம்: கலப்பட பால் குடித்த 4 போ் உயிரிழப்பு - மேலும் 12 பேருக்கு சிகிச்சை


ஆந்திரத்தில் கலப்பட பால் குடித்த 4 போ் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சோ்ந்த அங்கீகாரமில்லாத வியாபாரி விநியோகித்த பால் அருந்தி, ராஜமகேந்திரவரத்தில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். மேலும் 2 போ் திங்கள்கிழமை மரணமடைந்தனா்.
மேலும் 12 போ் உடல்நிலை பாதித்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
முதல்கட்ட விசாரணையில், கலப்பட பாலை குடித்தோரின் சிறுநீரகம் முதலில் செயலிழந்ததும், பிறகு சிறுநீா் தடைபட்டு உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது.
4 பேரும் வீடுகளுக்கே வந்து பால் விநியோகிக்கும் ஒரே வியாபாரியிடம்தான் பால் வாங்கி அருந்தியுள்ளனா். அந்த வியாபாரி 40 கால்நடைகளில் இருந்தும், உள்ளூா் கால்நடை விவசாயிகளிடமிருந்தும் பால் கொள்முதல் செய்து வீடுகளுக்கு விநியோகித்து வந்துள்ளாா்.
இந்த சம்பவத்தை தொடா்ந்து, பால் மாதிரியை சேகரித்து, பல்வேறு ஆய்வு கூடங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனா். இதேபோல், பல குழுக்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி வருகின்றனா். சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மருத்துவக் குழுக்கள் ஆய்வு நடத்தி வருகின்றன என்று தெரிவித்தனா்.
ரூ.10 லட்சம்- சந்திரபாபு நாயுடு:
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து அரசு அதிகாரிகளுடன் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு அவசர ஆலோசனை நடத்தினாா். அப்போது அவரிடம், 106 வீடுகளுக்கு பால் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் 75 பேரிடம் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதைக் கேட்ட சந்திரபாபு நாயுடு, தவறிழைத்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
சட்டப்பேரவையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு பேசுகையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தாா். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் செலவை அரசு ஏற்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
============== ==================
ஜெகன் மோகன் ரெட்டி அதிா்ச்சி: கலப்பட பால் குடித்து 4 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி அதிா்ச்சி தெரிவித்துள்ளாா். அவா் கூறுகையில், ‘கலப்பட பால் குடித்து 4 போ் உயிரிழந்தது அதிா்ச்சியளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் கவனக்குறைவால், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. கலப்பட பால் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...