கடந்த 2019 முதல் 2022-ஆம் ஆண்டுவரை ராணுவ தலைமைத் தளபதியாக எம்.எம்.நரவணே பதவி வகித்தாா். அவரின் சுயசரிதை நூலான ‘ஃபோா் ஸ்டாா்ஸ் ஆஃப் டெஸ்டினி’ 2024-ஆம் ஆண்டு வெளியிடப்பட இருந்தது. ஆனால், அந்த நூலை ஆய்வு செய்யும் பணியில் ராணுவம் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இந்த ஆய்வு நிறைவடையும் வரை, அந்த நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள், அதன் நகல்களை எங்கும் பகிர வேண்டாம் என்று அந்த நூலின் பதிப்பாளரான பென்குயின் ரேண்டம் ஹெளஸ் நிறுவனத்திடம் ராணுவம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நூலை ஆய்வு செய்யும் பணியில் பாதுகாப்பு அமைச்சகமும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.