ஒடிஸாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு மாத காலப் பணிக்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற கணக்கெடுப்பாளர்களும், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிஸா மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்கத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பயிற்சி பெற்ற இந்தக் கணக்கெடுப்பாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளைப் பட்டியலிடுவதற்காக அப்பகுதிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
தங்கள் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு எண்கள் பட்டியலிட்ட பிறகு கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புத் திட்டத்திற்கான தரவுகளை மொபைல் செயலி வாயிலாகச் சேகரிப்பார்கள்.
குடியிருப்பு வீடுகள், குடியிருப்பு அல்லாத கட்டடங்கள், சிறைச்சாலைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான இடங்களிலும் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவரிடமும், மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள 33 கேள்விகளை கேட்பார்கள் என அவர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர்களும் நகராட்சி ஆணையர்களும் முதன்மை மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளாகவும், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் மாவட்ட அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் செயல் அலுவலர்களும், வட்டாட்சியர்களும் பொறுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்புத் துறையாகச் செயல்பட்டு வருகிறது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுப்பாளர்களாகவும், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின் ஒரு பகுதியாக ஏப்ரல் 1 முதல் 15 வரை மக்கள் தாங்களே தங்கள் விவரங்களை சுய-கணக்கெடுப்பு வசதி இணையதளமான (se.census.gov.in) பதிவு செய்துகொள்ளலாம். இணையவழி சுய-கணக்கெடுப்பு இணையதளம் வாயிலாக 2.22 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்துள்ளன என ஒடிஸா மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குநர் நிகில் பவன் கல்யாண் தெரிவித்தார்.
வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறும்போது, இணையம் வாயிலாகப் பெறப்பட்ட சுய-கணக்கெடுப்பு விவரங்களை, களத்தில் உள்ள கணக்கெடுப்பாளர்கள் மீண்டும் சரிபார்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கிடும் பணி, 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 28 வரை மேற்கொள்ளப்பட உள்ளது.
Summary
The first phase of the Census-House listing Operations (HLO) commenced across all 30 districts of Odisha on Thursday, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வீடு, வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கியது: தவறான தகவல் அளித்தால் ரூ.1,0000 அபராதம்

புதுச்சேரியில் இன்றுமுதல் வீடு வீடாக மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்








