/

3 வயதில் 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல்  இடம்  பிடித்த உதகை சிறுவன்!

பள்ளிக்குச் செல்வதையும், பாடங்களைப் படிப்பதையும் வெறுக்கும் பல மாணவர்களுக்கு இடையே 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்'-ல் இடம் பிடித்துள்ளான் உதகையைச் சேர்ந்த 3 வயது சிறுவன். 

News image
சிறுவன் ராஜரக்ஷன்
Updated On :6 பிப்ரவரி 2024, 12:44 pm

ஏ. பேட்ரிக்

உதகை: கரோனா தொற்றால் உலகமே முடங்கிவிட்டதாக பரவலாக கூறப்பட்டாலும், பொதுமுடக்கத்திலும் சிலர்  முயற்சித்துக் கொண்டுதான் இருந்துள்ளனர். இதில் சில தகவல்கள் மட்டுமே வெளியுலகிற்கு தெரிய வந்தாலும் பல இன்னமும் மறைந்தே கிடக்கின்றன.

பொதுமுடக்க காலத்திலும் சாதனை படைத்த உதகையைச் சேர்ந்த 3 வயது சிறுவனான ராஜ ரக்க்ஷன், தனது தனித்திறமையினால்  இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் சாதனை படைத்தோரின் பட்டியலில் இடம் பெற்றுள்ளான். 

Story image

இதுதொடர்பாக இச்சிறுவனின் பெற்றோர் ஆஷ்லின் ஜோசப், தாய் சிவரஞ்சனி ஆகியோர் கூறியதாவது:

மதுரையை பூர்வீகமாகக் கொண்டாலும் தற்போது உதகையில் வசித்து வருகிறோம். உதகையில் தனியாக யூ டியூப்  சேனல் நடத்தி வரும் எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் ராஜ ரக்ஷிதா, 3-ம் வகுப்புப் படித்து வருகிறார். இரண்டாவதாக மகன் ராஜ ரக்ஷனுக்கு 3 வயதாகிறது. கரோனா பொது முடக்கத்தின் காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்த தனது சகோதரியுடன் சேர்ந்து ராஜ ரக்ஷனும் தானாகவே படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினான். 

இதன் காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களை 35 வினாடிகளிலும், 1 முதல் 100  வரையிலான எண்களை உடனடியாக எழுதியும், ஆங்கில எழுத்துகளைப் படித்தும், அவற்றை எழுதியும் பழகிக் கொண்டான். அதேபோல பழங்கள், பொருள்களின் வடிவங்கள்,  நிறங்கள், கோள்கள், மாதங்கள், கிழமைகள், கண்டங்கள் போன்றவற்றின் பெயர்களைக் கூறியும், அடையாளம் காட்டியும் வந்ததோடு ஆங்கிலம் மற்றும் தமிழில் ரைம்ஸ்களையும் கூற பழகிக் கொண்டான். இவனுக்கென  பிரத்யேகமாக யாரும் எதையும் கற்றுத்தராத  நிலையில் தனது சகோதரி படிப்பதைப் பார்த்தே இவனும் பழகிக் கொண்டது வித்தியாசாமன முயற்சியாக இருந்தது.

Story image

கரோனா பொதுமுடக்கத்தால் யாருமே வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் தனது தந்தை எழுதும் ஆங்கில எழுத்துகளைப் பார்த்தே தானும் அதேபோல, எழுதவும் கற்றுக் கொண்டான். அதேபோல, நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் பெயர்களோடு, இந்தியாவின் தேசிய  விலங்கு, தேசிய பறவை, தேசிய மலர், தலைநகரங்களின் பெயர்களும் இவனுக்கு அத்துபடியாகும். 3 வயது நிறவடையாத நிலையில் பள்ளிக்கும் அனுப்ப முடியாததால் இவனை ஒருமுறை அருகிலுள்ள பால்வாடி பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது அங்கிருந்த படங்களை பார்த்து தானாகவே அவற்றைக்குறித்து அங்கிருந்த ஆசிரியைகளிடம்  விளக்கியது அவர்களுக்கே ஆச்சரியமானதாக இருந்தது. 

Story image

இவனது தனித்திறமைகளை பார்த்து வியந்த நிலையில் 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பிற்கு இதுதொடர்பாக  விண்ணப்பிக்கலாமென நண்பர்கள் வட்டாரத்தில் தெரிவித்த யோசனையின் அடிப்படையில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தேவையான விடியோ ஆதாரங்களுடன் விண்ணப்பித்திருந்தோம். இதை பரிசீலித்த அந்நிறுவனத்தினர் செப்டம்பர் மாதத்தில் அனுப்பிய  கடிதத்தில் இந்த மூன்று வயது சிறுவனின்  திறமைகள் அங்கீகரிக்குமளவிற்கு இருப்பதால், இதற்காக இச்சிறுவனின் பெயர் இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ்  சாதனை புத்ககத்தில் இடம் பெறுவதாகவும் தெரிவித்து பதில் அனுப்பியிருந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

நீலகிரி மாவட்டத்திலிருந்து 3 வயதில் இந்தியா புக் ஆப் ரெகார்ட்ஸ் சாதனையாளர்கள் பட்டியலிலிருந்து இடம் பிடித்துள்ள முதல் சிறுவன் ராஜ ரக்ஷன் மட்டுமே என்பது அந்த மாவட்டத்திற்கு கூடுதல் சிறப்பாகும். பள்ளிக்குச் செல்வதையும், பாடங்களைப் படிப்பதையும் கட்டாயப்படுத்தினாலும் பலருக்கும் கசக்கும் சூழலில் பள்ளிக்குச் செல்லவே தொடங்காத வயதிலேயே சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள இச்சிறுவனிடம் எதிர்காலத்தில் நீ என்னவாகப் போகிறாய் என்று கேட்டால் சிரித்தபடியே தனது அறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.