நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தண்டவனம் என்கிற தண்டகாரண்யம்

சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி: மேற்கே அபூஜ்மார்மலை, கிழக்கே கிழக்குமலைத் தொடர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிகளை உள்ளடக்கிய மர்மபிரேதசம்தான் ""தண்டகாரண்யம்''.

News image
Updated On :3 ஜனவரி 2024, 12:04 pm

ஆர். நட​ராஜ்

சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் வனப்பகுதி: மேற்கே அபூஜ்மார்மலை, கிழக்கே கிழக்குமலைத் தொடர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திர மாநிலங்களின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதிகளை உள்ளடக்கிய மர்மபிரேதசம்தான் ""தண்டகாரண்யம்''.

ஆரண்யம் என்றால் வனப்பகுதி, "தண்டனை நிரம்பிய காடு' என்று பெயர். இராமாயணத்திலும் தண்டகாரணியம் அசுரர்கள் நிரம்பிய பகுதியாக வர்ணிக்கப்பட்டுள்ளது, விந்திய மலையைக் கடப்பதற்கு அபாயகரமான இந்த வனப்பகுதியைக் கடக்க வேண்டும். இராமர் வனவாசத்தில் பல ஆண்டுகள் வாழ்ந்து அசுரர்களை வதம் செய்த குறிப்பு இராமாயணத்தில் உள்ளது. சூர்ப்பனகை சந்திப்பு. அவளது மூக்கு அறுபடுதல், அவளது சகோதரர்கள் கரன், தூஷணன். இராமரைத் தாக்கியபோது அவர்களை வதம் செய்தது எல்லாம் இந்த வனப்பகுதியில்தான்.

தண்டகாரண்யத்தின் பெரும்பாலான வனப்பகுதியைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலம் இப்போது யுத்தகளமாக மாறிவிட்டது. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தில் பல பகுதிகள் உள்ளன. அவர்களது திடீர் தாக்குதல் நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. மே 25-ஆம் நாள் மாலை மாவோயிஸ்டுகளின் அதிரடித் தாக்குதல் 28 உயிர்களைப் பலிகொண்டது.

அரசுக்கு ஆதரவாகச் செயல்படவும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளை எதிர்ப்பதற்கும் அந்தந்தப் பகுதி மக்களைக்கொண்ட அணி "சல்வா ஜுடும்' என்கிற பெயரில் செயல்பட்டுவருகிறது. இந்த அணியின் முதல் தலைவராக இருந்த மகேந்திர கர்மா இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

2006-இல் துவக்கப்பட்ட "சல்வா ஜுடும்' என்ற மக்கள் படை, மாவோயிஸ்டு தீவிரவாதிகள் ஆதிக்கத்தில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு அமைக்கப்பட்டது. முதலில் நன்றாகச் செயல்பட்டாலும் காலப்போக்கில் பழங்குடியினத் தலைவர்கள் சிலரின் அராஜகச் செயலால் இந்த அமைப்பின் மீது பல புகார்கள் எழுந்தன. இந்த அணியைக் கலைக்க வேண்டும் என்றும் இந்த அணியின் செயல்பாடு சட்டவிரோதமானது என்றும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டு 2011-இல் உச்ச நீதிமன்றம் சல்வா ஜுடுமிற்குத் தடை விதித்தது.

மாவோயிஸ்டுகளின் தாக்குதல் பட்டியலில் முக்கிய இடம் பெற்றவர் மகேந்திர கர்மா. அவருக்கு விசேஷப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது, ஆயினும் அச்சம்பவம் நடந்த நாளன்று சரியான தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், இவ்வளவு உயிரிழப்பு ஏற்பட்டது.

மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நந்தகுமார் படேல் அவரது மகன், மூத்த காங்கிரஸ் தலைவர் வித்யா சரண் சுக்லா மற்றும் பல முக்கிய நபர்கள் 30 வாகனங்களில் பாதுகாவலர்கள் புடைசூழப் பயணித்திருக்கக் கூடாது,

அவர்கள் சென்ற இடமும் ஜுரம்காட்டி என்ற பஸ்தார் வனப்பகுதியில் அமைந்துள்ள இடம். இத்தகைய அபாயகரமான இடங்களுக்குச் செல்வதற்கு முன்னால் "பாதுகாப்பு சுத்திகரிப்பு' என்று அந்த இடத்தை முன்கூட்டியே பாதுகாப்புப் படையினர் சென்று கண்காணித்து அபாயம் இல்லையென்று சொல்லிய பிறகே முக்கிய நபர்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த முக்கியப் பாதுகாப்பு நடைமுறை சரியாக அமலாக்கப்படவில்லை என்பது இந்தத் திடீர் தாக்குதலில் தெரியவருகிறது.

சுமார் 250 தீவிரவாதிகள் "ஏ.கே.-47' போன்ற நவீன ஆயுதங்களோடு தாக்குதல் நடத்தியுள்ளனர். முதலில் கண்ணிவெடி தாக்குதலும் நடத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிகள் சரியாக இயங்கவில்லையென்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆயினும் உடன்சென்ற பாதுகாப்புப் படையினர் இயன்றவரை போராடி உயிரிழந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் மகேந்திர கர்மாவைத்தான் குறிவைத்துள்ளனர். அவரும் தானாகவே முன்வந்து தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு ""என்னைக் கொன்றுவிடுங்கள், மற்றவர்களை விட்டுவிடுங்கள்'' என்று கூறினாராம்; அதேபோல் காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல் தனது மகனை விடுவித்து விடுங்கள், தன் உயிரை எடுத்துவிடுங்கள் என்று கூறியும் ஈவிரக்கமின்றி அவர்களைக் கொன்றுவிட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் அவர்கள் மீது பாய்ந்திருக்கின்றன. இது மூர்க்கத்தனத்தின் உச்ச கட்டம்.

மாவோயிஸ்டு தீவிரவாதிகளை ஆதரித்துப் பேசும் மனித உரிமை ஆர்வலர்கள் இத்தகைய கொடூரத் தாக்குதல்களைக் கண்டனம் செய்வதில்லை. மாறாக பாதுகாப்புபடையினரின் முந்தைய நடவடிக்கைகளால் இத்தகைய தாக்குதல்களைச் சந்திக்க வேண்டிவந்தது என்று நியாயப்படுத்துவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளைத் தற்காப்பிற்காகத் தாக்கினால் அது "சட்டவிரோதம்'. ஆனால், மாவோயிஸ்டுகளின் வெறித் தாக்குதல், "பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பு' என்ற இரட்டை நிலை நியாயங்கள்தான் பாதுகாப்பு நிலைபெறத் தடங்கலாக உள்ளது.

யார் இந்த மாவோயிஸ்டுகள்? நக்சல்பாரி என்ற மேற்கு வங்காள மாநிலத்தின் சிறிய கிராமத்தில் இருந்து, கானு சன்யால், சாரு மஜும்தார் என்பவர்கள் ""ஆயுதப்போராட்டத்தின் மூலம் நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து நிலத்தைக் கைப்பற்றி ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டும்'' என்று மார்க்சிஸ் லெனினிஸ்ட் என்ற பிரத்யேக கம்யூனிஸ்ட் அமைப்பை 1967-இல் ஏற்படுத்தினர். அது 1970-ஆம் வருடத்தில் இருந்து மிகப்பெரிய இயக்கமாக உருவாகி நிர்வாகத்திற்கு எதிராகச் செயல்பட்டது, அது மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் பரவியது.

1980-இல் இருந்து தமிழ்நாட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால், நக்சலைட் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் மிக அதிகமான தாக்குதல்களுக்கு உள்ளானது. "கிரே-உறவுண்ட்' என்ற ஒரு சிறப்பு அதிரடிப்படை அப்போது இருந்த காவல்துறைத் தலைவர் டோராவால் உருவாக்கப்பட்டு தீவிரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்து, தப்பி ஓடிய நக்சலைட் தீவிரவாதிகள் சத்தீஸ்கர், ஓடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வேரூன்றி நாட்டின் இறையாண்மைக்குச் சவாலாக இந்தப் பிரச்னையை உருவாக்கியுள்ளனர்.

பி.டபிள்யு.ஜி. (மக்கள் யுத்தக் குழு) என்ற இந்த நக்சலைட் இயக்கம் எட்டு மாநிலங்களில் பரவியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏழு மாவட்டங்கள், ஜார்க்கண்டில் 10 மாவட்டங்கள், ஒடிசாவில் 5 மாவட்டங்கள், பிகாரில் 6 மாவட்டங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நமது நாட்டின் "நுண்ணறிவுப் பிரிவின்' (ஐ.பி.) கணிப்புப்படி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நக்சலைட் தீவிரவாதிகள் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தலைமறைவாக, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் "ஏகே.-47' போன்ற அதிநவீன ஆயுதங்களும் வெடிமருந்துப் பொருட்களும் உள்ளன. இந்தத் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் பணியில் உள்ளனர்.

இந்திய உள்நாட்டுப் பாதுகாப்பு சரித்திரத்தில் மிகப்பெரிய தாக்குதல் ஏப்ரல் 6, 2010-இல் நடந்தது. நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய அத் தாக்குதலில் 76 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இது சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடா என்ற வனப்பகுதியில் நடந்தது.

அதே வருடம் மே மாதம் நக்சலைட்கள் தந்தேவாடா - சுக்மா சாலையில் பாதுகாப்புப் படையினரும் பொதுமக்களும் பயணம் செய்த பேருந்தை தாக்கினர்; அதில் 15 காவலர்களும் 20 பொதுமக்களும் கொல்லப்பட்டனர், மூன்றாவது தாக்குதல் ஜுன் 29-ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்டது. அதில் 26 பாதுகாப்புப் படையினர் மாண்டனர். ஒரே வருடத்தில் இந்த மூன்று தாக்குதல்கள் நமது நாட்டின் நக்சலைட் பிரச்னையை உலக கவனத்திற்குக் கொண்டுவந்தது.

இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகுதான் மத்திய, மாநிலப் பாதுகாப்புப் படையினர் முனைப்பாகச் செயல்பட்டனர். 2011-ஆம் ஆண்டு கிஷன்ஜி என்ற முக்கிய தீவிரவாதத் தலைவரை "என்கவுன்டரில்' கொன்றனர். இது மாவோயிஸ்ட் தீவிரவாதத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு.

இம்மாதிரி நிகழ்வுகளில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக்கொள்ள நக்சலைட்டுகள் புதிய தாக்குதல்கள் நடத்த ஆயத்தம் செய்வார்கள். இவ்வாறு மார்ச் 27, 2012-ஆம் ஆண்டு கத்சிரோலி மாவட்ட வனப்பகுதியில் கண்ணிவெடி வைத்து 12 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களைக் கொன்றனர், இதன் தொடர்ச்சிதான் மே 25-இல் நடந்த தர்பா பள்ளத்தாக்கு தாக்குதல்.

மாவோயிஸ்டு தீவிரவாத இயக்கம் மற்ற தீவிரவாத இயக்கத்தில் இருந்து மாறுபடுகிறது. ஜிகாதி மற்றும் அல்-கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்கள் பொது இடங்களில் தாக்குதல்களை நடத்தி சம்பந்தப்படாத பொது மக்களுக்கும், சேவை மையங்களுக்கும், வியாபாரத் தலங்களுக்கும் சேதம் விளைவிப்பார்கள். ஆனால், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்துத் தாக்குவார்கள். நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்படுவோர்களை அச்சுறுத்தும் வகையில் தாக்குதல் நடத்துவார்கள்.

இந்த வித்தியாசத்தை பாதுகாப்புப் படையினர் உணர்ந்து அதற்கு ஏற்றவாறு பதில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாவோயிஸ்டுகள் கிராமப் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும், பழங்குடியினர்களோடு இணைந்து அவர்களைத் தூண்டிவிட்டுச் செயல்படுகின்றனர்.

கிராமப்புறங்களில் சாலை வசதி இருக்காது. பாதுகாப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு தாமதமாகும். உரிய தகவல்கள் தக்க சமயத்திற்கு வராது. தகவல் கிடைத்தாலும் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கும், அசம்பாவிதத்தைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க இயலாது.

தகவல் பரிமாற்றச் சாதனங்கள் வனப்பகுதிகளிலும். மலைப்பகுதிகளிலும் சரியாகச் செயல்படாது. அந்தந்த வனப்பகுதி கிராமங்கள், இடங்களை நன்கு அறிந்த உள்ளூர் மாவோயிஸ்டுகள் எளிதாகத் தாக்குதல் நடத்தி வெற்றி காண முடிகிறது.

இத்தகைய தாக்குதலினால் பாதுகாப்புப் படையினருக்கு ஒரு பின்னடைவு தொய்வு நிலை ஏற்படுகிறது. இதைச் சமன்செய்து மீண்டும் தீவிரவாதத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் முயற்சி செய்ய வேண்டும். இது ஒரு தொடர் போராட்டம். வெற்றி அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. அதேசமயம் உள்ளூர் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கவேண்டும். பாதுகாப்புப் பணியோடு அந்தந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கொடுக்கக்கூடிய முன்னேற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்களில் எடுக்கப்படும் வளர்ச்சிப்பணிகள் மூலம் இளைஞர்களுக்கு வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். அத்தகைய வேலையில்லா இளைஞர்கள்தான் மாவோயிஸ்டுகளுக்கு, பாதுகாப்புப் படையினரின் வருகை பற்றித் தகவல்கள் கொடுக்கின்றார்கள்.

இதனை எதிர்கொள்ள சத்தீஸ்கர் மாநில அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. மத்திய அரசின் ஆதரவுடன் புதிய பாதுகாப்பு பட்டாலியன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காவல் துறையினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வனப்பகுதிகளில் 2,199 தொலைத்தொடர்பு கோபுரங்கள் இணைக்கப்பட உள்ளன. மாவோயிஸ்ட் ஆளுகையில் இருந்த 120-க்கும் மேற்பட்ட தளங்கள் உள்ளூர் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

நமது நாட்டின் பழங்குடியினரின் ஜனத்தொகை சுமார் 9 கோடி. இது இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் சுமார் 8.5 சதவிகிதம் ஆகும். மத்திய அரசு 9 அம்சத் திட்டத்தை, நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நடைமுறைப்படுத்த அறிவித்துள்ளது. அதில் பழங்குடியினர் வனப்பகுதியில் காலம் காலமாக அனுபவித்து வரும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது முக்கிய அம்சம் ஆகும்.

இதைத் தவிர வளர்ச்சிப்பணிகளுக்காக அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்குக் கல்வி வசதி அளிக்கும் வகையில், பல இடங்களில் கல்விக்கூடம் அமைக்கப்பட இருக்கிறது. நடமாடும் மருத்துவ வாகனங்கள் கிராமப்புறங்களுக்குச் சென்று மருத்துவ வசதி மக்களுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு உடனடி மருத்துவ வசதி கிடைக்கும். 1,776 கிராமங்களில் துவக்கத்தில் உள்ள மின்சாரக் கட்டமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.

பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதிகமாக வளர்ச்சிப்பணிகள் மேற்கொண்டால்தான் அமைதியை உறுதி செய்ய முடியும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகமே நுழைய முடியாத அபூஜ்மார் போன்ற பகுதிகள் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மத்தியப் பாதுகாப்புப் படையினரால் மீட்கப்பட்டது.

மாநில அளவில் பல முன்னேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ""சாராந்தா'', மேற்கு வங்காளத்தில் ""ஜங்கள் மங்கள்'' போன்ற திட்டங்களை மக்கள் வரவேற்கின்றனர்.

மக்களின் தேவை சீரான சாலை, குடிதண்ணீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவையே. தொழிற்சாலைகள் நிறுவுவது மட்டும் வளர்ச்சிப் பணியாகாது. நிலக்கரிச் சுரங்கங்கள் பணம் படைத்தவர்களுக்கு ஆதாயமாக இருக்கலாம். ஆனால், உள்ளூர் மக்களுக்கு வன அழிப்பு அபாயம்தான்.

வனங்களைத் தெய்வங்களாக வணங்கும் பழங்குடியினரின் இந்த மனநிலையை மாவோயிஸ்டுகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி நிர்வாகத்திற்கு எதிராகத் தூண்டிவிடுகின்றனர். உள்நாட்டுக் கிளர்ச்சியை ஒடுக்குவது அவ்வளவு எளிதல்ல. விடாமுயற்சியும், அயர்ச்சியில்லா மாசற்ற வளர்ச்சிப் பணிகளும்தான் பாதுகாப்புப் பாதையை அமைக்க வல்லது.

கட்டுரையாளர்: முன்னாள் காவல் துறைத் தலைவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.