குஜராத் முதல் தமிழ்நாடு வரை 1,64,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் 24.8 சதவீத வனப்பகுதியே தூய்மையானதாக, ஆக்கிரமிப்புக்குள்ளாகாத இடமாக இருக்கிறது. மற்ற இடங்கள், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை அனுமதித்ததால் அழிக்கப்பட்டுள்ளன அல்லது ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. சுரங்க குத்தகைகளுக்கு அனுமதி அளித்தல், அனல்மின் நிலையங்கள் ஏற்படுத்துதல், சாலை, ரயில் போக்குவரத்துக்காக மலைகளைக் குடைதல் என வனப்பகுதி சூறையாடப்படுகிறது. இதனால் வனவளம் குறைந்து, ஆறுகளின் போக்கே வழிமாறிப் போவதும், மழை குறைவதும், வன உயிரினங்கள் அழிவுக்குள்ளாவதும் நடக்கின்றன. இவை குறித்து எந்த அரசும் சிறிதளவும் கவலைகொள்ளாததுதான் வேதனைக்குரிய விஷயம். அரசின் அனுமதியுடன் நடைபெறும் இவை ஒரு பக்கம் என்றால், சட்டவிரோதமாக அரசியல் செல்வாக்குடன் கல் குவாரிகள், சுரங்கங்களும் பல இடங்களில் இயங்குகின்றன.