முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் நக்ஸலைட் தீவிரவாதிகள் பிடியில் இருந்தது. ஜாதிப் பிரிவினை - மேலோர் கீழோர் என்ற பாகுபாடு, நிலச்சுவான்தாரர்களின் ஆதிக்கம், விவசாயக் கடன் தொல்லை என்ற பல அவல நிலவரங்கள் நக்ஸலைட்டுகள் தீவிரவாதக் கெள்கைகளைப் பரப்பி, மக்களை வன்முறையில் தூண்டுவதற்கு ஆதாய போர்க்களம் உருவாக பாதையிட்டது. துணிகரமான, காவல்துறை நடவடிக்கை மூலம் அன்றைய சீரிய அரசுத்தலைமை தீவிரவாதத்தை முழுமையாகக் களைய உதவியது. தாழ்ந்தவர்கள் எவருமில்லை; தாழ்த்தப்பட்டவர்கள் சமுதாயத்தில் தாழ்ந்தவர்களாகவே இருப்பதில்தான் பலருக்கு ஆதாயம். ஜாதிப் பிரிவினை இன்றும் ஒழிந்தபாடில்லை என்பது தர்மபுரி நாயக்கன் கொட்டாய் கிராமம், நத்தம் காலனி சம்பவங்களிலிருந்து மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.