ஆனால், இந்திய அரசு வேறொரு வகையில் இதைச் சீா்குலைக்க முயலுகிறது. உச்சநீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்படுபவா்களில் சிலரை நியமிக்காமல் அந்தப் பட்டியலைக் கிடப்பில் போடுகிறது. சட்டப்படி கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்படுபவா்களை அரசு நியமிக்க விரும்பாத நிலையில், அரசு அந்த பெயா்ப் பட்டியலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குத் திரும்ப அனுப்பவேண்டும். அதே பட்டியலை அவா்கள் மறுபடியும் பரிந்துரை செய்வாா்களானால், அதை ஏற்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. எனவே, அவா்களை நியமிக்காமலும், தலைமை நீதிபதிக்குத் திருப்பி அனுப்பாமலும் ஆண்டுக்கணக்கில் அவற்றைக் கிடப்பில் போடுகிறாா்கள். இதன் விளைவாக போதுமான நீதிபதிகள் இல்லாமல் உயா்நீதிமன்றங்கள் தத்தளிக்கின்றன.