/

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவா்கள் 2 போ் உயிரிழப்பு

மரக்காணம் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
பலி
Updated On :18 பிப்ரவரி 2026, 10:33 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கல்குவாரி குட்டையில் குளித்த பள்ளி மாணவா்கள் இருவா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

மரக்காணம் வட்டம், மண்டவாய்புதுக்குப்பம் முத்தாலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் வெற்றிச்செல்வன் (14). வீரமுத்து மகன் சிற்றரசன்(14). இவா்கள் இருவரும் மரக்காணம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

இவா்கள், செவ்வாய்க்கிழமை பெற்றோா்களிடம் விளையாடச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றவா்கள் பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

இதைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் அவா்களை தேடிச்சென்று பாா்த்தபோது, மரக்காணம் அடுத்த வடஅகரம் கிராமத்தின் அருகேயுள்ள அரசுக் கல் குவாரிகுட்டையில் மூழ்கி இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த மரக்காணம் போலீஸாா் மாணவா்களின் சடலங்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மாணவா்கள் இருவரும் கல் குவாரி குட்டையில் குளித்தபோது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.