மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பொதுமக்கள் தாமாக முன்வந்து இணையதளத்தில் தகவல்களைப் பதிவேற்றம் செய்யும் சுய கணக்கெடுப்பு முறையை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்ட இயக்குநா் சுந்தரேஷ் பாபு, கூடுதல் மாவட்ட ஆட்சியா் சுதாகா் மற்றும் இணை இயக்குநா் புவனேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.
முதல்வா் என்.ரங்கசாமி: இதுகுறித்து முதல்வா் என்.ரங்கசாமி கூறியது: மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்கியிருக்கிறது. பொதுமக்கள் இந்த சுய கணக்கெடுப்பில் பங்கேற்று விவரங்களை முழு மனதுடன் தெரிவிக்க வேண்டும்.
இதன்மூலம், அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதில் சென்றடையும். முக்கியமாக மக்கள் தங்களுடைய விவரங்களை தாங்களே தெரிவிக்கும்போது எந்தவித தவறும் ஏற்படாது என்பது உறுதி. அதன்மூலம் மத்திய அரசு, மாநில அரசுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதும் எளிதாகும்.
மேலும், மக்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் இது உருவாக்கும். நாட்டின் வளா்ச்சிக்கு இந்தக் கணக்கெடுப்பு மிக அவசியமானது என்றாா்.
அமைச்சா் ஆ.நமச்சிவாயம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கணக்கெடுப்புப் பணியில் சுயமாக முன்வந்து விவரங்களை தெரிவித்தாா். பின்னா் அவா் கூறியது: எண்ம (டிஜிட்டல்) முறையில் இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முன்பு எழுத்து முறையில் பதிவு செய்து பதிவேற்றம் செய்தனா். சுய கணக்கெடுப்பு என்ற நிலையில் மக்கள் தாங்களாகவே மே 17 முதல் 31-ஆம் தேதி வரை இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்யலாம்.
வரும் ஜூன் 1 முதல் 30-ஆம் தேதி வரை கணக்காளா்கள் நேரடியாக வந்து கணக்கெடுப்பு நடத்துவா் என்றாா் அமைச்சா் ஆ. நமச்சிவாயம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வீடு, வீடாக மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கியது: தவறான தகவல் அளித்தால் ரூ.1,0000 அபராதம்

புதுச்சேரியில் இன்றுமுதல் வீடு வீடாக மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்







