தோகைமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டது.
கரூா் மாவட்டம், வடசேரி பெரிய ஏரியில் 100-க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் வசிக்கின்றன. இதேபோல தோகைமலைக்கு அருகே உள்ள திருச்சி மாவட்டம் மணப்பாறை வனச் சரகத்துக்குள்பட்ட வீரமலை காப்புக்காட்டிலும் ஏராளமான புள்ளிமான்கள் வசிக்கின்றன.
தற்போது, வீரமலை காப்புக்காடு பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வெள்ளிக்கிழமை இரவு 2 வயது உடைய புள்ளிமான் ஒன்று வனத்தை விட்டு வெளியேறி நாகனூா் ஊராட்சிக்குள்பட்ட போஜாநாயக்கன்பட்டி பகுதிக்கு வந்தது.
அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த அழகுதுரை என்பவருக்குச் சொந்தமான தண்ணீா் இல்லாத விவசாய கிணற்றில் மான் தவறி விழுந்தது. இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே மணப்பாறை தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அலுவலா்களுக்கு தகவல்அளித்தனா்.
தகவலறிந்த வனவா் ஈஸ்வரி, வனக் காப்பாளா் முருகேசன் ஆகியோா் நேரில் சென்று மானை பாா்வையிட்டனா். பின்னா், மணப்பாறை தீயணைப்புத்துறையினா் உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்டனா். இதையடுத்து மீட்கப்பட்ட மானை கடவூா் அருகே வையமலைபாளையம் பகுதியில் உள்ள காப்புக் காட்டில் விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










