விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஆய்வக நுட்பனர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது?

அரியலூர், ஜன. 2: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆய்வக நுட்பனர்கள் (லேப் டெக்னீஷியன்கள்) பணியிடங்களை நிரப்புவதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் உள்ளவர்களின் சான்றித

News image
Updated On :28 டிசம்பர் 2023, 3:59 pm

கு. வைத்திலிங்கம்

அரியலூர், ஜன. 2: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆய்வக நுட்பனர்கள் (லேப் டெக்னீஷியன்கள்) பணியிடங்களை நிரப்புவதற்காக, வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் உள்ளவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 3 மாதங்கள் ஆகியும் பணி நியமனம் செய்யப்படாமல் உள்ளனர். எனவே, காலியாகவுள்ள ஆய்வக நுட்பனர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், நிறுவனங்கள் மூலம் ஆய்வக நுட்பனர் உள்ளிட்ட மருத்துவம் சாரா படிப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், 2005 ஆம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்துள்ள மருத்துவமனைகளில் இரண்டாண்டு கால ஆய்வக நுட்பனர் படிப்பைத் தொடங்கியது.

அரசே ஆய்வக நுட்பனர் படிப்பதைத் தொடங்கியதால், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் இதில் சேர்ந்து படித்தனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆய்வக நுட்பனர் பணியிடங்களை நிரப்பும் வகையில், 2007, 2008 ஆம் ஆண்டு வரை ஆய்வக நுட்பனர் (இரண்டாண்டு படிப்பு) படிப்பு படித்து சான்றிதழ் பெற்றவர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில், தங்கள் பரிந்துரையை சரிபார்த்துக் கொள்ளுமாறு 2010, மே மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தகுதியுள்ள ஆய்வக நுட்பனர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்குச் சென்று பரிந்துரை விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகத்தின் மூலமாக, 2010, செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்துக்கு பதிவு மூப்பு அடிப்படையில் தகுதி பெற்ற ஆய்வக நுட்பனர்களின் கல்வி, சாதிச் சான்றுகள் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன. சுமார் ஆயிரம் பேர் முதல் கட்டத்திலும், அதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சுமார் 300 பேருக்கு மேலாகவும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்தச் சரிபார்ப்பு முடிந்த பின்னர், ஒரு மாதம் கழித்து ஆய்வக நுட்பனர் படிப்பு முடித்தவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றார்களா அல்லது ஆங்கில வழிக் கல்வியில் பயின்றார்களா என்ற விவரமும் கேட்டறியப்பட்டது. தகுதியான ஆய்வக நுட்பனர்களும் விவரங்களை அனுப்பிவைத்தனர்.

ஆனால், சான்றிதழ்கள் சரிபார்த்து மூன்று மாதங்களாகியும் எவ்வளவு பேர் ஆய்வக நுட்பனர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டார்கள், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் எவ்வளவு பேர், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தேர்வு செய்யப்பட்டோர் எவ்வளவு பேர் என்ற எந்த விவரமும் இதுவரை அறிவிக்கப்படாதது சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, பணி நியமன ஆணை வருமா என்ற ஏக்கத்தில் உள்ள ஆய்வக நுட்பனர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகளும், மருத்துவமனையில் ஆய்வக வகுப்புகளும் நடத்தப்பட்டன. அரசு மருத்துவமனைகளில் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகள் பணிகளை நாங்கள் மேற்கொண்டு கற்றறிந்தோம். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆய்வக நுட்பனர் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு பரிந்துரை அடிப்படையில் நிரப்பப்படும் என அரசின் அறிவிப்பால், மகிழ்ச்சியடைந்த நாங்கள் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரையிலான பணிகளை முடித்து வேலைவாய்ப்பு ஆணை கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம்.

ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் வேலைவாய்ப்பு ஆணை பற்றிய எந்த ஒரு தகவலும் வரவில்லை. இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டால் எந்தப் பணி நியமன ஆணைகளையும் வழங்க முடியாது. தேர்தலுக்குப் பிறகு நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியாது.

எனவே, தமிழக முதல்வரும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் ஆய்வக நுட்பனர் பணியிடங்களை நிரப்புவதற்காக பணியை விரைந்து மேற்கொண்டு, எங்களுக்கு பொங்கல் பரிசாக பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்கின்றனர் சான்றிதழ் சரிபார்த்து பணி நியமனத்தை எதிர்நோக்கியுள்ள ஆய்வக நுட்பனர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.