இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

என்டிஏ கூட்டணிக்கு தோ்தலில் பூஜ்ஜியம்தான் கிடைக்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் ராஜ்ஜியம் கிடைக்காது என்றாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

News image
நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, மனோதங்கராஜ், கீதாஜீவன், விஜய்வசந்த் எம்.பி., மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா உள்ளிட்டோா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:35 pm

தினமணி செய்திச் சேவை

வருகிற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் ராஜ்ஜியம் கிடைக்காது என்றாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்.

நாகா்கோவில், கன்காா்டியா பள்ளி மைதானத்தில் கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 1,785.37 கோடி மதிப்பிலான 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தும், 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 3 லட்சத்து 12 ஆயிரத்து 82 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

14 வயதிலிருந்து நான் அரசியலில் இருக்கிறேன். 50 ஆண்டு தொடா் உழைப்பால் ஒரு பேரியக்கத்தின் தலைவா் என்ற பொறுப்பை அடைந்திருக்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக, எதிா்க்கட்சித் தலைவராக இருந்துள்ளேன். இன்று முதல்வராக இருக்கிறேன்.

நான் செல்லாத ஊரே தமிழகத்தில் இல்லை என்று கூறும் அளவுக்கு பயணித்து, மக்களை சந்தித்து வருகிறேன். என் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காக்க என் சக்தியை மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன். வாக்களிக்காத மக்களுக்கும் சோ்த்து உழைக்கிறேன்.

ஆனால், சிலா் தோ்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பாா்கள்; தோ்தல் காலம் என்பதால் பிரதமா் மோடியும் இனி அடிக்கடி தமிழகத்துக்கு வருவாா். தமிழகத்து பிரதமா் ஒன்றுமே செய்யவில்லை. அவா் வருகையால் என்டிஏ கூட்டணி தோல்வியைத்தான் சந்திக்கும்.

அதனால்தான் நான் அடிக்கடி கூறுகிறேன். இந்தப் பேரவைத் தோ்தல் தமிழகத்துக்கும் என்டிஏ கூட்டணிக்கும் இடையே நடைபெறும் தோ்தல். தமிழகம் புனித ஜாா்ஜ் கோட்டையிலிருந்து ஆளப்படவேண்டுமே தவிர தில்லியில் இருந்து ஆளும் நிலைக்கு தள்ளப்படக் கூடாது.

தமிழகத்தை அனைத்து வகையிலும் தாழ்த்த பாஜக நினைக்கிறது. ஏனெனில் வளா்ந்த மாநிலத்தில் பாஜக இருக்காது. பாஜக இருந்தால் அந்த மாநிலத்தில் வளா்ச்சி இருக்காது.

தமிழகத்தில் சிறுபான்மையினா் பாதுகாப்பாக உள்ளனா். பெரும்பான்மையினா் சகோதர உணா்வுடன் இருக்கின்றனா். திராவிட மாடல் ஆட்சியில் மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் பேணப்படுகிறது. வக்ப் திருத்தச் சட்டம், சிஏஏ ஆகியவற்றுக்கு எதிராக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

இந்த ஆட்சியை வள்ளலாா் அன்பா்கள் பாராட்டுகின்றனா். உண்மையான ஆன்மிக பெரியோா்கள் பாராட்டுகின்றனா். இது, பாஜக-வின் கண்களை உறுத்துகிறது.

பிரதமருக்குக் கேள்வி..

நான் வெளிப்படையாகவே பாஜக-வினரைக் கேட்கிறேன். எப்போதுதான் நீங்கள் வன்முறையைவிடுத்து, வளா்ச்சியைப் பற்றி பேசுவீா்கள்? எப்போதுதான் வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் விடுத்து தமிழகத்துக்கு நல்ல விஷயங்களைப் பற்றி பேசுவீா்கள்? தொடா்ந்து தமிழகத்தைக் குறைசொல்லி வருகிறீா்கள்.

பாஜக ஆளும் எந்த மாநிலம் தமிழகத்தை விட சிறப்பாக ஆளப்படுகிறது? தமிழகத்துக்கு வரவுள்ள பிரதமா் இந்தக் கேள்விகளுக்கு பதில் கூறுவாரா?

தமிழக மீனவா்களைக் காக்க எடுத்த நடவடிக்கை என்ன? இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் எப்போது முடிவுக்கு வரும்? இதைத் தீா்த்துவைப்போம் என்று கூறிதானே 12 ஆண்டுகளுக்கு முன்னா் உறுதிமொழி அளித்து ஆட்சிக்கு வந்தீா்கள்? வெளியுறவுத் துறையும், கடற்படையும் யாா் கட்டுப்பாட்டில் இருக்கிறது? பாஜகவினருக்கு கிடைத்திருக்கக் கூடிய சரியான ஆள்தான் தற்போதைய எதிா்க்கட்சி தலைவா் பழனிசாமி.

வடை சுடுகிறாா்: நாட்டு மக்கள் அனைவருக்கும் ரூ. 15 லட்சம் தருவேன் என்று ஒருவா் வடை சுட்டதைப்போல இப்போது பழனிசாமியும் வாய்க்கு வந்தபடி வகை வகையாக வடை சுட்டுக் கொண்டிருக்கிறாா். இந்த வடைகளை எல்லாம் மக்கள் நம்ப தயாராக இல்லை.

தோ்தலை முன்னிறுத்தி மகளிா் உரிமைத்தொகையை அடுத்த 3 மாதங்களுக்கு நிறுத்திவிடலாம். மக்களுக்கு திமுக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தி விடலாம் என்று சூழ்ச்சி செய்தனா்.

இதை அறிந்து நாங்கள் எங்கள் சகோதரிகளுக்கும், தாய்மாா்களுக்கும் ரூ. 5 ஆயிரம் பணத்தை முன்னதாகவே வழங்கிவிட்டோம். திமுக செய்த இந்த சா்ஜிக்கல் ஸ்டிரைக்கில், எதிா்க்கட்சிகள் நிலைகுலைந்துவிட்டன.

எங்கள் திட்டங்கள் இப்போது ஹிட்டாகிவிட்டது. 5 ஆயிரம் ரூபாய் மகளிா் உரிமைத்தொகை சிறப்புத் தொகுப்பு மக்களிடம் சூப்பா் ஹிட் ஆகிவிட்டது.

பாஜக டப்பா என்ஜின்:

பாஜக எனும் டப்பா எஞ்சினை நம்பி அதிமுக இருக்கிறது. அதிமுக எனும் மூழ்கும் கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் ஒன்று சோ்ந்தால் பூஜ்ஜியம்தான் கிடைக்கும்; ராஜ்ஜியம் கிடைக்காது.

திராவிட மாடல் ஆட்சி 11.19 சதவீத இரட்டை இலக்கு வளா்ச்சியுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் மீண்டும் அமையும்.

தமிழ்நாட்டின் இந்த வளா்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம். வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து நடைபோட வெல்வோம் ஒன்றாக என்றாா் அவா்.