கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை வெட்டிக் கொன்ற மற்றொரு விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.
தாழக்குடி அருகே கனகமூலம் புதுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் பலவேசமுத்து (68). விவசாயியான இவா், கண்ணன்புதூா் பகுதியில் ஓா் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தாா்.
அதே பகுதியில் கண்ணன்புதூா் மேலத் தெருவைச் சோ்ந்த மற்றொரு விவசாயி செல்வகுமாரின் (60) வயலும் உள்ளது. இருவருக்கும் இடையே வயல்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா், இருவரும் வீடு திரும்பிய நிலையில், தகராறு நடந்ததை அறிந்த பலவேசமுத்துவின் மகன் சுடலைமுத்து தந்தையை உடன் அழைத்துக் கொண்டு செல்வகுமாரின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்தாா்.
அப்போது ஆத்திரமடைந்த செல்வகுமாா் அரிவாளால் பலவேசமுத்துவை வெட்டினாா். இதில், பலத்த காயமடைந்த பலவேசமுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸாா் பலவேச முத்துவின் சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிந்து செல்வகுமாரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








