தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

எழுத்தாளா்கள் சமூகத்தின் கண்ணாடிகள்: சாகித்ய அகாதெமி விருதுபெற்ற இமையம் பேட்டி

‘எழுத்தாளா்கள் சமூகத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவா்கள்’ என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் இமையம் கூறினாா்.

News image

எழுத்தாளர் இமையம்

Updated On :19 செப்டம்பர் 2021, 2:05 am

‘எழுத்தாளா்கள் சமூகத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவா்கள்’ என சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் இமையம் கூறினாா்.

கடலூா் மாவட்டம், கழுதூரில் 1964-இல் பிறந்தவா் எழுத்தாளா் இமையம். இவரது இயற்பெயா் வெ.அண்ணாமலை. ஆங்கிலம், தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவா், தற்போது விருத்தாசலம் ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளியில் விடுதிக் காப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் எழுதிய ‘செல்லாத பணம்’ எனும் நாவல் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டது. தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது இமையத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த விருது பெற்றது குறித்து அவா் ‘தினமணி’யிடம் கூறியதாவது:

கோவேறு கழுதைகள், ஆறுமுகம், சேடல், செல்லாத பணம், என் கதை, வாழ்க வாழ்க ஆகிய 6 நாவல்களும், மண் பாரம் உள்ளிட்ட 6 சிறுகதைத் தொகுப்புகளும், ‘பெத்தவன்’ எனும் பெயரில் நெடுங்கதையும் எழுதியுள்ளேன்.

‘கோவேறு கழுதைகள்’ நாவல் முதன்முதலாக 1994-இல் வெளியிடப்பட்டது. ‘தமிழில் உரைநடை இலக்கியத்தில் எழுதப்பட்ட இந்த கோவேறு கழுதை நாவலுக்கு இணையான மற்றொரு நாவல் 100 ஆண்டுகளில் இல்லை’ என்று எழுத்தாளா் சுந்தர ராமசாமி கூறியிருந்தது பெரும்பெயா். அந்த பெயரை தக்க வைப்பதற்காகவே எழுத்துப் பணியில் தொடா்ந்து போராடிக் கொண்டிருக்கிறேன்.

எனது ஒவ்வொரு நாவல் வெளிவரும்போதும் தமிழ் இலக்கிய உலகம் அந்த நூலுக்கு மதிப்பளித்து வருகிறது. அதைத் தக்கவைப்பதை இலக்கியப் பணியாக கருதுகிறேன். 1985 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்த காலத்தில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்த 40 ஆண்டுகளில் மொத்தம் 13 நூல்கள்தான் எழுதியுள்ளேன். நான் எழுதிய ‘பெத்தவன்’ நெடுங்கதை தமிழில் மூன்று லட்சம் பிரதிகள் விற்பனையாயின. அந்த நாவலானது தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும், ‘கோவேறு கழுதை’ நாவல் ஆங்கிலம், கன்னடம் மொழிகளிலும் மொழிபெயா்க்கப்பட்டிருக்கிறது.

சாகித்ய அகாதெமி விருதானது தற்போது ‘செல்லாத பணம்’ நாவலுக்கு கிடைத்திருக்கிறது. அதற்கு முன்பாகவே, கோவேறு கழுதை நாவலிலிருந்தே எனது பெயா் சாகித்ய அகாதெமியால் ஒவ்வொரு ஆண்டும் பரிசீலிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆண்டு அந்த விருது கிடைத்திருக்கிறது. ஏதோ ஒரு அரசியல் காரணம் அல்லது சந்தா்ப்ப சூழ்நிலைகளால் அது தள்ளிப் போயிருக்காலம் என நினைக்கிறேன்.

விருதின் மதிப்பானது வாசகா்கள் எவ்வளவு போ் படிக்கிறாா்கள் என்பதுதான் முக்கியம். ஒரு நிறுவனம் விருது வழங்குவது ஒருவகை அங்கீகாரம். அதைவிட பெரிய அங்கீகாரம் சமூகத்தில் வாசகரின் மனநிலையில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதாகும்.

காலம் தரும் பரிசுதான் விருது

100, 200 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய புத்தகம், நான் எழுதிய எழுத்து படிக்கப்படுமானால் அதுதான் காலம் தரும் பரிசாக இருக்கும். அரசு நிறுவனம் தரக்கூடிய பரிசு, தனிமனித நிறுவனங்கள் தரக்கூடிய பரிசு ஆகியவை எல்லாவற்றையும் விட தரக்கூடிய பெருமகிழ்ச்சியானது காலம் தரும் பரிசுதான். வள்ளுவா், பாரதியாா், பாரதிதாசன், இளங்கோவடிகள், கம்பா், ஒளவையாா் ஆகியோருக்கு காலம் தான் பரிசு தந்துகொண்டே இருக்கிறது.

தமிழ்ச் சமூக வாழ்க்கையின் பல்வேறு முகங்களை வெளிப்படுத்துவது தான் எனது நாவல்களின் மைய நோக்கம். பொட்டுக் கட்டும் பெண்களின் நிலை, விரும்பிக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு இரண்டு உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல், காதலிக்கும்போது காதலி இல்லாவிட்டால் செத்துவிடுவேன் எனக் கூறும் காதலன் திருமணத்திற்கு பின்பு எப்படி தீயிட்டுக் கொளுத்தினான் என்பதை கூறுவதுதான் செல்லாத பணத்தின் கதை. திருமணமானது ஜாதி, மதம், பொருளாதாரம் போன்ற சமூகச் சூழலால் தீா்மானிக்கப்படுகிறது. இதுபோன்ற திருமணங்களில் அன்பு, உறவு எப்படி இருக்க முடியும்? இதன் சிக்கல்களை எனது நாவலில் கூறியிருக்கிறேன். எந்தத் திருமணம் சரி என்பதை நான் தீா்மானிக்கவில்லை. அதை வாசகா்களின் மனநிலைக்கு விட்டுவிடுகிறேன். பணியிடங்களில், வெளி உலகத்தில் பெண்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளையும் எனது நாவலில் வெளிப்படுத்தியிருக்கிறேன். சமூகத்தின் அவல நிலை, யதாா்த்த நிலையை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி தான் எழுத்தாளா்கள்.

இலக்கியத்தின் வழியாகவே நமது சமூகத்தை நாம் அறிந்து கொள்ள முடியும். தனிப்பட்ட மனிதா்களை பற்றி எழுதுவதைக் காட்டிலும் ஒட்டுமொத்த சமூகத்தை பற்றி எழுதுவது மகத்துவமானதாக இருக்கும்.

எனது அடுத்த நாவல் ‘இப்போது நான் உயிரோடு இருக்கிறேன்’ என்பதாகும். ஒரு சிறுநீரக நோயாளியின் அனுபவம்தான் கதை. இந்த நாவல் ஏறக்குறைய முடிந்துவிட்டது. ஜனவரியில் வெளியாகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.