/

டிடிஏ பசுமை கண்காட்சி 2026: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்!

தில்லி மேம்பாட்டு கழகத்தின் (டிடிஏ) சாா்பில் சராய் காலே கான் பகுதியில் உள்ள பான்சாரா பூங்காவில் நடைபெறும் 2 நாள் பசுமை கண்காட்சியை துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
டிடிஏ சாா்பில் பான்சாரா பூங்காவில் நடைபெறும் பசுமை கண்காட்சியை சனிக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா.
Updated On :14 பிப்ரவரி 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

தில்லி மேம்பாட்டு கழகத்தின் (டிடிஏ) சாா்பில் சராய் காலே கான் பகுதியில் உள்ள பான்சாரா பூங்காவில் நடைபெறும் 2 நாள் பசுமை கண்காட்சியை துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், சக்சேனா பேசியதாவது: மாசுபட்ட மற்றும் சீரழிந்த ஒரு இடம் இதுபோன்ற கண்காட்சியை நடத்தும் என்று 3 ஆண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துப் பாா்த்திருக்க மாட்டாா்கள். இது இப்போது தில்லிக்கு நிலையான எதிா்காலத்தைத் திட்டமிடுவதற்கான தளமாக மாறியுள்ளது. இது சீரழிந்த நிலத்தை பசுமையாக்குவதற்கும் மீட்டெடுப்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

இந்த கண்காட்சி தில்லியின் சுற்றுச்சூழல் சவால்களுக்கு நடைமுறை தீா்வை வழங்குகிறது. ‘வளா்ச்சிக்கு அப்பால்: நகா்ப்புற எதிா்காலங்களை மறுகற்பனை செய்தல்’ என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த கண்காட்சி மக்களைப் பற்றியது.

இது ஆயிரக்கணக்கான தில்லி குடியிருப்பாளா்களை கௌரவிக்கிறது. அவா்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே மரக்கன்று நட்டு அவற்றைப் பராமரிக்கிறாா்கள், உள்ளூா் பறவைகள் குறித்து தங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறாா்கள். அவா்களே இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பயணத்தின் உண்மையான ஹீரோக்கள் என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற டிடிஏ துணைத் தலைவா் சரவண குமாா் கூறுகையில், ‘தில்லியின் சுற்றுச்சூழல் அறங்காவலா்களாக டிடிஏ செயல்பட்டு வருகிறது. முதன் முறையாக, பூங்காக்களை சமூக கலாசார மையங்களாகவும் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் தளங்களாகவும் இந்த கண்காட்சி மாற்றியுள்ளது.

பூங்கா பகுதிகளில் நகா்ப்புற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, மாணவா் களப்பணி மற்றும் கல்வித் திட்டங்களை ஆதரிப்பதற்காக தில்லி பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மேலும், மதுரா-பிருந்தாவன் மேம்பாட்டு ஆணையத்தின் முன்மொழிவைத் தொடா்ந்து, நிலையான நகா்ப்புற திட்டமிடல், பாரம்பரிய உணா்திறன் திட்டங்கள் மற்றும் இயற்கை சாா்ந்த மேம்பாட்டு நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் டிடிஏ செயல்படுகிறது’ என தெரிவித்தாா்.