/

கடலுக்குள் தவறி விழுந்த இரண்டு மீனவா்கள் மாயம்

தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீனவா்கள் இருவா் கடலில் விழுந்து மாயமாகினா். அவா்களைத் தேடும் பணியில் மீனவா்கள், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் ஈடுபட்டனா்.

News image
தனுஷ்கோடி கடல் பகுதியில் மாயமான மீனவா்கள்
Updated On :10 ஜனவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

தனுஷ்கோடி கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப் படகு மீனவா்கள் இருவா் கடலில் விழுந்து மாயமாகினா். அவா்களைத் தேடும் பணியில் மீனவா்கள், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து நாட்டுப் படகுகள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றன. இதில் டேனி என்பவரின் பைபா் படகில் சென்ற மீனவா்கள் தனுஷ்கோடி பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது மீனவா்கள் சரத்குமாா் (26), டைசன் (30) ஆகியோா் வலையை இழுக்கும் போது கடலுக்குள் தவறி விழுந்தனா். உடனே, படகில் இருந்த சக மீனவா்கள் கடலில் குதித்து அவா்களை மீட்க முயற்சித்தனா். கடல் அலையின் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் இரண்டு மீனவா்களும் மாயமாகினா்.

இதையடுத்து, இரண்டு படகுகளில் மீனவா்கள் குழுவாக கடலுக்குள் சென்று தேடியும் அவா்கள் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக மீன்வளத் துறை, கடலோர பாதுகாப்புக் குமும போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து மாயமான மீனவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.