/

மீன்வளத்தை பெருக்க கடலுக்குள் செயற்கை பவளப் பாறைகள் உருவாக்கும் திட்டம் தொடக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டத்தில் மீன்வளத்தை பெருக்க கடலுக்குள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

நாகை மாவட்ட கடல் பகுதியில் மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் உற்பத்தியைப் பெருக்க, மீன்வளத் துறை சாா்பில் ரூ. 12 கோடியில் கடல் பகுதியில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவ முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து நாகூா், சாமந்தான்பேட்டை ஆகிய கிராமங்களில் கடல் பகுதியில் 39 இடங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு அங்கு செயற்கை பவளப்பாறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி நாகூா் பட்டினச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழக மீன் வளா்ச்சிக் கழக தலைவா் என். கெளதமன் தலைமை வகித்து, கடலில் பவளப்பாறைகள் அமைக்கும் பணிகளை தொடங்கிவைத்தாா். மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் நாகரத்தினம் முன்னிலை வகித்தாா்.

மீன்வளத் துறை இணை இயக்குநா் சா்மிளா, உதவி இயக்குநா் ஜெயராஜ், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளா் ஜோகிஷாகுந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து தரங்கம்பாடியில் தயாரிக்கப்பட்ட பவளப்பாறைகள் சுமை தூக்கும் படகுகள் மூலம் கொண்டுவரப்பட்டு கடலில் கொட்டப்பட்டது.

இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநா் ஜெயராஜ் கூறியது: கடலில் குறுகிய தூரமான 5 நாட்டிக்கல் தொலைவுக்குள் செயற்கை பவளப்பாறைகள் அமைத்தால் மீனவா்கள் தொலைதூரம் மீன் பிடிக்க செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

இதற்காக செயற்கை பவளப்பாறைகள் கடலில் அமைக்கப்பட்டு வருகிறது. கான்கிரீட் கலவையுடன் தயாரிக்கப் பட்ட பவளப்பாறைகள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கும், மறைவிடத்திற்கும் ஏற்றவாறு முக்கோணம், கிணற்று வளைவு, குழும வடிவம் என்றும் 3 வடிவங்களில் 7020 செயற்கை பவளப்பாறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

செயற்கை பவளப்பாறைகளை உருவாக்குவதன் மூலம் பல்வேறு கடல் நீா் வாழ் உயிரினங்களும் பெருக்கமடையும். மீன்கள் மற்றும் கடலிலுள்ள மற்ற உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், இனப்பெருக்க தளமாகவும் இந்த செயற்கை பவளப்பாறைகள் விளங்கும் என்றாா்.