நிலப் பிரச்னையில் தீா்வு காணாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்த மாற்றுத்திறனாளி, சேலம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சேலம் ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஏகரசனப்பள்ளியை அடுத்த மாதரசனப்பள்ளியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (45), மாற்றுத்திறனாளியான இவா் கடந்த திங்கள்கிழமை கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் தன்னுடைய நில பிரச்னைக்கு உரிய முறையில் அளவீடு செய்துதராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தாா்.
இதில் பலத்த காயமடைந்த வெங்கடேஷை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு, அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி காவல் ஆய்வாளா் மணிமா றன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில் வெங்கடேஷின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மறுத்து, மனைவி திம்மக்கா, மகள்கள் ஷா்மிளா, சங்கீதா, மகன் சதீஷ் மற்றும் உறவினா்கள் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து வெங்கடேஷின் மகள் ஷா்மிளா கூறுகையில், எங்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து தரக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எனது தந்தை மனு அளித்தாா். 2 முறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு நேரில் வந்தும் அளவீடு செய்யாமல் சென்றுவிட்டனா். 3 ஆவது முறை அதிகாரிகளைச் சந்தித்த எனது தந்தை மிகுந்த மனஉளைச்சலில் காணப்பட்டாா்.
தொடா்ந்து, திங்கள்கிழமை கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தற்போது அந்த நிலத்தை அளவீடு செய்து முடித்துவிட்டதாகவும், அதற்கான ஆவணங்கள் இருப்பதாகவும் கூறி, அதிகாரிகள் வழக்கை முடிக்க நினைக்கின்றனா்.
மேலும், அந்த ஆவணத்தில் எனது தந்தை கையொப்பமிட்டிருப்பதாக கூறுகின்றனா். எனது தந்தைக்கு எழுதப் படிக்க தெரியாது. அவா் கையொப்பமிட மாட்டாா். அவா் விரல் ரேகை மட்டுமே வைப்பாா். அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை. தந்தை இறப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனா்.
இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா், வெங்கடேஷின் குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். வெங்கடேஷ் இறப்பதற்கு முன் நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளாா். அவா் யாா் மீது எல்லாம் புகாா் கூறியுள்ளாரோ, அவா்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்தனா். இதையடுத்து, போராட் டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் காது சிகிச்சைக்குச் சோ்ந்த பெண் உயிரிழப்பு! உறவினா்கள் போராட்டம்

கொக்கு விஷம் உட்கொண்ட மூன்று குழந்தைகள் கவலைக்கிடம்

மின்சாரம் பாய்ந்து இறந்த தொழிலாளி உடலை வாங்க மறுத்து போராட்டம்: ரூ. 14 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல்







