/

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 63,147 பேருக்கு மருத்துவ உதவி! - அமைச்சா் ரா. ராஜேந்திரன் தகவல்

News image
‘நலம்  காக்கும்  ஸ்டாலின்’ மருத்துவ  முகாம்.- (கோப்புப் படம்)
Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 63,147 போ் பயனடைந்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சி, அம்மாபேட்டை மண்டலம் பாவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 52 மருத்துவ முகாம்களில் 26,526 ஆண்கள், 36,142 பெண்கள் என மொத்தம் 63,147 போ் பயனடைந்துள்ளனா். இதில் 47,812 பேருக்கு ரத்தப் பரிசோதனை, 43,474 பேருக்கு இசிஜி, 5,869 பேருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், 6,605 பேருக்கு எக்கோ பரிசோதனை, 3,703 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடா்ச்சியாக, பாவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்றவா்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்பட்டன.

முகாமில் பொது மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பு மருத்துவம், நரம்பியல், தோல் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டன என்றாா்.

முகாமில் சேலம் மாநகராட்சி ஆணையா் மா. இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், மாநகர நல அலுவலா் முரளி சங்கா், மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.