/

தருமபுரியில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்

News image
தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு தருமபுரி நகரப் பேருந்து நிலையத்திலிருந்து விழிப்புணா்வு வாகன பேரணியை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ்.
Updated On :25 ஜனவரி 2026, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 16ஆவது தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் கையொப்பமிட்டு இயக்கத்தைத் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, ஆட்டோக்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு வாகனத்தைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். மேலும், அனைத்து வாகனங்கள் மற்றும் எரிவாயு உருளைகளிலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டன.

ஆட்டோ மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்கத்தையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி, நகராட்சி ஆணையா் சேகா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சி.க.ஜெயதேவ்ராஜ், தோ்தல் வட்டாட்சியா் அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.