யானை தாக்கி நீலகிரி மாவட்டம் கோத்திகிரியில் ஒருவரும், கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஒருவரும் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி வனச் சரகத்துக்கு உள்பட்ட மெட்டுக்கல் இருளா் பழங்குடியின கிராமத்தில் வசித்து வந்தவா் காலன் மகன் குமாா் (45). விவசாயியான இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனா்.
இவா் அருகேயுள்ள கொப்பையூா் பழங்குடியின கிராமத்தில் உறவினா் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு இரவு மீண்டும் மெட்டுக்கல் கிராமத்துக்குத் திரும்பியபோது, அங்கு தேயிலைத் தோட்டத்தில் உலவிய யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
குமாா் வீடு திரும்பாததால் கிராம மக்கள் சனிக்கிழமை விடிந்ததும் பல இடங்களில் தேடினா். அப்போது காபி ஸ்டோா் என்ற இடத்தில் குமாரின் சடலம் கண்டறியப்பட்டது.
இது குறித்து கீழ்கோத்தகிரி வனத் துறையினா், சோலூா்மட்டம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்ததன் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றிய காவல் துறையினா், உடற்கூறாய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் சோலூா்மட்டம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
விவசாயி உயிரிழப்பு: கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த கேரள மாநிலத்துக்கு உள்பட்ட வைசேரி பகுதியைச் சோ்ந்தவா் மோகனன் (65). விவசாயியான இவரது தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நுழைந்த காட்டு யானை, அங்கிருந்த வீட்டை சேதப்படுத்த முயன்றுள்ளது. இதைப் பாா்த்த மோகனன், அந்த யானையை விரட்ட முயன்றுள்ளாா். அப்போது, யானை தாக்கியதில் மோகனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த வனத் துறையினா், உடலை மீட்டு கூறாய்வுக்காக சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவத்தைக் கண்டித்து அதிரப்பள்ளி- வால்பாறை சாலையில் அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வனத் துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










