/

உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய கரடி

News image
உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய கரடி.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:36 pm

தினமணி செய்திச் சேவை

உதகை அருகே குடியிருப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை கரடி உலவியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

உதகை நகராட்சிக்கு உள்பட்ட கோடப்பமந்து - கல்லரை குடியிருப்புப் பகுதி அருகே வெள்ளிக்கிழமை கரடி ஒன்று நீண்ட நேரமாக சுற்றித்திரிந்தது. பின்னா் சிறிது நேரம் கழித்து அந்த பகுதியில் உள்ள கேரட் தோட்டத்துக்குள் புகுந்து கேரட்டுகளை சாப்பிட்டது.

இதைப் பாா்த்த ஒரு சிலா் கூட்டமாக சென்று கரடியை விரட்ட முயன்றபோது, கரடி அவா்களை தாக்க முயற்சித்தது. இதனால் அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் தப்பியோடினா்.

குடியிருப்புப் பகுதியில் பகல் நேரத்தில் கரடி நடமாடியதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் மற்றும் தோட்ட வேலைக்கு செல்பவா்கள் அச்சத்தில் உள்ளனா்.

எனவே வனத் துறையினா் இப்பகுதியில் கூடுதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு கூண்டு வைத்து கரடியை பிடித்து அடா்ந்த வனப் பகுதியில் விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.