ஈரோடு சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியில் திராவிட இயக்க நூற்றாண்டுச் சிறப்பு கருத்தரங்கம் டிச.8-ம் தேதி நடைபெறுகிறது. இதில் கவிக்கோ அப்துல்ரகுமான் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்கிறார்.
இது குறித்து கருத்தரங்க இயக்குநரும், சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசியருமான முனைவர் ப.கமலக்கண்ணன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திராவிட இயக்க நூற்றாண்டுச் சிறப்புக் கருத்தரங்கை சென்னை காவ்யா அறக்கட்டளை தலைவர் சு.சண்முகசுந்தரம் தொடங்கிவைக்கிறார். திராவிட இயக்கக் கவிஞர்களும் கவிதைகளும் என்ற நூலை கவிக்கோ அப்துல்ரகுமான் வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
கருத்தரங்கையொட்டி வேளாளர் மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.சிந்தாமணி தலைமையில் நடைபெறும் முதல் அமர்வில் கவிஞர்கள் முடியரசன், உடுமலை நாராயணகவி, கவிக்கோ அப்துல்ரகுமான், புலமைப்பித்தன், வேழவேந்தன் ஆகியோரின் கவிதைப் படைப்புகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
ஸ்ரீ வாசவி கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஜி.மலர்விழி தலைமையில் நடைபெறும் இரண்டாவது அமர்வில் கவிஞர்கள் மு.மேத்தா, முருகு சுந்தரம், புதுவை சிவம், பொன்னிவளவன், நா.காமராசன் ஆகியோரின் கவிதைப்படைப்புகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இரா.கலைவாணி தலைமையில் நடைபெறும் மூன்றாவது அமர்வில் நவீன கவிஞர்கள், திரையிசைக் கவிஞர்கள், கா.மு.ஷெரீப், ஈரோடு தமிழன்பன், அறிவுமதி ஆகியோரின் கவிதைப்படைப்புகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு நடைபெறும் நிறைவுவிழாவுக்கு
சிக்கய்ய நாய்க்கர் கல்லூரி முதல்வர் (பொ) அ.சர்வலிங்கம் தலைமை வகிக்கிறார். விழாவில் கவிஞர் நாமக்கல்நாதன், கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் இரா.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
விழாவில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள், பள்ளித் தமிழாசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.