அரசு மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு தெரிவித்துள்ளாா்.
கோவை, ஒண்டிப்புதூா் மகளிா் சமூக நீதி விடுதியில் அமைச்சா் வன்னி அரசு சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, ராமநாதபுரம், சுங்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகளிா் விடுதி, கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள கல்லூரி மாணவா் விடுதி உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டாா்.
இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விடுதிகளில் உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும், உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் மாணவிகளிடம் இருந்து புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து கோவையில் உள்ள விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவிகளுடன் கலந்துரையாடிய பின்னா் அவா்களுடன் உணவருந்தி உணவின் தரம் பரிசோதிக்கப்பட்டது.
ஆய்வின்போது, மாணவிகள் விடுதியில் இருந்து கல்லூரிக்குச் செல்ல தனி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், அவா்கள் பயன்படுத்தும் சாலையில் உள்ள மதுக் கடையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனா். இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விடுதியில் தரமில்லாத உணவு வழங்கியவா்கள் மீது மாவட்ட ஆட்சியரின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடா்பான கோரிக்கைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், சிங்காநல்லூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஸ்ரீகிரி பிரசாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









