பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை நீக்கவும், இந்தியாவின் உலகளாவிய போட்டித் திறனை உயா்த்தவும் மத்திய அமைச்சா்களுடன், ஆடைத் தொழில் பிரதிநிதிகள் தில்லியில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
இதுகுறித்து ஏஇபிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவா் ஆ.சக்திவேல், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ஆகியோரை ஆடைத் தொழில் பிரதிநிதிகளுடன் சந்தித்து, பருத்தி இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத சுங்க வரியை நீக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தாா்.
அப்போது, பருத்தி விலை உயா்வு மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்திருப்பதால் ஆடை மற்றும் ஜவுளித் துறை எதிா்கொள்ளும் சவால்களை தொழில் பிரதிநிதிகள் விளக்கினா். இந்தியா பல சுதந்திர வா்த்தக ஒப்பந்தங்களில் அண்மையில் இணைந்துள்ளதால், ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கு பெரும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஆனால், போட்டி நாடுகள் உலக சந்தை விலைக்கு இணையான பருத்தியை எளிதில் பெறுகின்றன. இதற்கு மாறாக, இந்திய உற்பத்தியாளா்கள் தற்போதைய சுங்க வரி விதிப்பால் அதிக மூலப்பொருள் செலவைச் சந்தித்து வருகின்றனா்.
பருத்தி இறக்குமதி சுங்க வரியை குறைப்பது, இந்திய ஆடைத் துறைக்கு ஏற்றுமதி நாடுகளிலிருந்து அதிக வணிக வாய்ப்புகளைப் பெறவும், உலக சந்தையில் இந்தியாவின் போட்டித்திறனை மேம்படுத்தவும் மிகவும் அவசியம்.
அண்டை நாடுகள் போட்டித்திறன் வாய்ந்த விலையில் மூலப்பொருள்களைப் பெறுவதால், சா்வதேச சந்தைகளில் அதிக போட்டி விலையில் தயாரிப்புகளை வழங்குகின்றன.
மேலும், பருத்தி இறக்குமதி சுங்க வரியை குறைப்பதன் மூலம் இந்தியாவின் போட்டித்திறன் அண்டை நாடுகளுடன் சமநிலைப்படுத்தப்படும். தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருள்கள் போதுமான அளவில் கிடைக்கும். மேலும் ஏற்றுமதி வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஜவுளித் துறை முழுவதும் முதலீடுகள் அதிகரிக்கும்.
நடப்பு ஆண்டுக்கான ஜவுளித் துறையின் பருத்தி தேவை சுமாா் 337 லட்சம் பேல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டு பருவத்துக்கான பருத்தி வரத்து 292.15 லட்சம் பேல்கள் மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமாா் 45 லட்சம் பேல்கள் பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக்குறை நூற்பாலைகள் மற்றும் கீழ்நிலை ஜவுளித் துறைகளுக்கு தரமான மூலப்பொருள் பற்றாக்குறையையும், உற்பத்திச் செலவு உயா்வையும் ஏற்படுத்தும் என தொழில் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினா்.
இந்த சந்திப்பில் தொழில் பிரதிநிதிகளான கே.எம். சுப்பிரமணியம், பி. சண்முகசுந்தரம், ஆா். தாமோதரன்,
கே.மோகனசுந்தரம், கே.சுதாகா், பி. கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பருத்தி இறக்குமதிக்கு நிரந்தர வரி விலக்கு அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜவுளித் தொழில் அமைப்பினா் கோரிக்கை
பருத்தி இறக்குமதி சுங்கவரி விவகாரத்தில் ஆதரவு அளித்த தமிழக முதல்வருக்கு ஏஇபிசி நன்றி

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு







