முதலீட்டு மானியம், வட்டிச் சலுகை வழங்கப்படுமா? காத்திருக்கும் ஜவுளித் துறையினர்
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கான முதலீட்டு மானியம் மற்றும் வட்டிச் சலுகை சுமார் ரூ.3,000 கோடியை மத்திய அரசு வழங்குமா என்று


தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கான முதலீட்டு மானியம் மற்றும் வட்டிச் சலுகை சுமார் ரூ.3,000 கோடியை மத்திய அரசு வழங்குமா என்று கடந்த சில ஆண்டுகளாக ஜவுளித் துறையினர் காத்திருக்கின்றனர்.
இதுதொடர்பாக விவாதிப்பதற்காக வரும் வியாழக்கிழமை (செப்.4) புதுதில்லியில் ஜவுளித் துறை அமைச்சரவை வழிகாட்டுக் குழு கூடுகிறது.
இந்தியாவில் உள்ள ஜவுளித் துறையினர் உலக நாடுகளுக்குப் போட்டியாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தால் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி வழங்கும் திட்டம் 1999 ஏப்ரல் முதல் துவங்கப்பட்டது. துவக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்ட இத் திட்டம் பின்னர் 2007 வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின் மறு சீரமைப்புக்கென 2012 வரையும் நீட்டிக்கப்பட்டது.
இதில் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் பேரில் முதலீட்டு மானியம் மற்றும் வட்டிச் சலுகைகள் வழங்கப்பட்டன. ஜவுளித் தொழிலில் உள்ள பல்வேறு பிரிவுகளில் 2007-ஆம் ஆண்டுமுதல் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. முதலீட்டுக்குத் தகுந்த மானியம், வட்டிச் சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஜவுளித் தொழிலில் ரூ.65 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டது.
திடீரென, அப்போதிருந்த மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு சலுகைகளை வழங்குவதில் தாமதப்படுத்தியது. இதற்கு வங்கிகளும் காரணம். 2010-11இல் தாற்காலிகமாக தொழில்நுட்ப மேம்பாட்டு நிதிக்கான சலுகைகள் நிறுத்தப்பட்டன. இக் காலத்தில் செய்த முதலீடுகளுக்கு உண்டான சலுகைகளை வழங்க வேண்டும் என்று தென்னிந்திய மில்கள் சங்கத்தினர் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, ரூ.1,972 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.300 கோடி மட்டும் செலவிடப்பட்டது. மீதித் தொகையை ஜவுளித் துறையினர் நிதி அமைச்சகத்துக்கு திரும்பத் தந்தனர். இதனால், ஜவுளித் துறையினர் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சில வங்கிகள் முதலீட்டுக்கான சலுகையை மத்திய அரசிடம் இருந்து பெற முயற்சிக்கவில்லை. அதனால்தான் சலுகைகளை கொடுக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதவிர, வங்கிப் பணியாளர்கள் செய்த சில சிறிய தவறுகளாலும் ஜவுளித் துறையினருக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
அதன்பின் முதலீட்டு மானியம் மற்றும் வட்டிச் சலுகை பெற ஜவுளித் துறையின் ஒவ்வொரு பிரிவுக்கும் உச்ச வரம்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கும் தேவையான நிதியை, நிதி அமைச்சகம் ஒதுக்காததால் ஜவுளித் துறையினருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ஜவுளித் துறையினருக்கு ஒரே முறையில் அனைத்து பணப் பலன்களையும் வழங்கலாம் என ஜவுளித் துறை அமைச்சகம் பரிந்துரைத்ததை அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஏற்க மறுத்துவிட்டார். இப்போதைய சூழ்நிலையில் 2007-ஆம் ஆண்டிலிருந்து ஜவுளித் துறையினருக்கு முதலீட்டு மானியம் மற்றும் வட்டிச் சலுகை ரூ.3,000 கோடியை வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜவுளித் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜவுளித் துறை அமைச்சரவை வழிகாட்டுக் குழு இதுதொடர்பாக விவாதிப்பதற்காக வரும் வியாழக்கிழமை புதுதில்லியில் கூடுகிறது.
இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர் டி.ராஜ்குமார் கூறுகையில், ஜவுளித் துறையில் செய்த முதலீட்டு மானியம் மற்றும் வட்டிச் சலுகையாக வழங்க ரூ.3,000 கோடி ஒதுக்க வேண்டும். இத்தொகை வரும் என்ற எதிர்பார்ப்பில் ஜவுளித் துறையினர் முதலீடு செய்துள்ளனர். தொகை வராததால் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளனர். இதுதொடர்பாக ஜவுளித் துறை அமைச்சர் மூலமாக பிரதமருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...