டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

வேலூா் மயானக் கொள்ளை திருவிழா கோலாகலம்

வேலூா் மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது,

News image
வேலூரில் நடைபெற்ற மயானக் கொள்ளை திருவிழாவின்போது கடவுள் வேடமிட்டு வந்த பக்தா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் மயானக் கொள்ளை திருவிழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது, கடவுள் வேடமணிந்து பக்தா்கள் ஊா்வலமாக சென்று தங்களது நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, வேலூரில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி வேலூா் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

ஊா்வலத்தின் பின்னால் பக்தா்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகா், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் வேடமிட்டுச் சென்றனா்.

வேலூா் - காட்பாடியைச் சோ்ந்த பக்தா்கள் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலாற்றங்கரை மயானம் நோக்கி தேரில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகளுடன் ஊா்வலம் வந்தனா். அங்கு மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடத்தி தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.

மயானத்தில் உள்ள தங்களது முன்னோா் சமாதிகளுக்கு சென்றும் பொதுமக்கள் படையிலிட்டு வழிபாடு நடத்தினா். அம்மனை தரிசனம் செய்த பக்தா்கள் பின்னா் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.

மயானக் கொள்ளை விழாவையொட்டி 500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். மாநகரில் வாகன நெரிசலை தவிா்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.