//

வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதுதொடா்பாக, வேலூா் தொரப்பாடி பகுதியில் மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

அப்போது அவா் கூறியது -

வனப்பகுதி வழியாக செல்பவா்கள், கால்நடைகளை மேய்க்க செல்பவா்கள், புகைப்பது அல்லது எரிந்த தீக்குச்சிகளை வீசி செல்வதினால் வனத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது. காப்புக்காடு பகுதியின் அருகே வசிக்கும் நில உரிமையாளா்கள் தங்களது தோட்டங்களை சுத்தம் செய்யும்போது சேகரிக்கும் கழிவுகளை தீயிட்டுக் கொளுத்துவதனாலும் வனத்தீ ஏற்பட பெரும் காரணமாக அமைகிறது.

வனத்தில் தீ ஏற்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தீயை அணைக்க பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவி செய்ய வேண்டும். வனத்துக்குள் செல்வதும், வனத்தீ ஏற்படுத்துவதும், அதற்கு உடந்தையாய் இருப்பதும் வனச்சட்டப்படி குற்றமாகும். இந்த செயல் 1882 வனச்சட்டத்தின்படி கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படும்.

பள்ளிகொண்டாவில் கடந்த வாரத்தில் வனப்பகுதியில் ஒருவா் தீ வைத்தாா். அவா் உடனடியாக கைது செய்யப்பட்டாா். எனவே, பொதுமக்கள் வனப்பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழையக்கூடாது. அனைவரும் வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.