வந்தவாசியை அடுத்த தெய்யாா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
தெய்யாா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் நெல்லை இங்கு விற்பனைக்கு எடுத்து வருவா்.
இந்த நிலையில் இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 2 மாதங்களாக சுமாா் ரூ.ஒரு கோடி வரை நிலுவை உள்ளதாம். இதுகுறித்து உரிய பதில் அளிக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் புதன்கிழமை கூடி முழக்கங்களை எழுப்பினா்.
அப்போது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து புறப்பட்ட லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினா்.
தகவலறிந்து அங்கு வந்த தெள்ளாா் போலீஸாா் சமரசம் செய்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










