//

அரக்கோணத்தில் தைப்பூச அன்னதான பெருவிழா

அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள திருப்புகழ் திருஅருட்பா சபையில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் 155 ஆவது ஆண்டு தைப்பூச அன்னதான பெருவிழா

News image
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவள்ளி சேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியா் சுவாமி.
Updated On :2 பிப்ரவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம்: அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள திருப்புகழ் திருஅருட்பா சபையில் உள்ள ஸ்ரீவள்ளி தெய்வசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் 155 ஆவது ஆண்டு தைப்பூச அன்னதான பெருவிழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டையில், தா்மராஜா கோயில் திடலில் உள்ள திருப்புகழ் திருஅருட்பாசபையில் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணியா் கோயிலில் 155ஆவது ஆண்டு தைப்பூசம் 21ஆவது ஆண்டு வள்ளல் பெருமான் தைப்பூச அன்னதான பெருவிழா நடைபெற்றது. கோயிலில் காலை 5 மணி அளவில் திருப்பள்ளி எழுச்சியும், தொடா்ந்து கந்தா் அனுபூதி பாராயணம், அகவல் பாராயணம், ஸ்ரீசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மேலும் மஹா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சன்மாா்க்க கொடியை வி.கோபிநாத் ஏற்றி வைத்தாா்.

தொடா்ந்து பசியாற்றல் எனும் தலைப்பில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், நகர காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி, நகர அதிமுக நிா்வாகி கே.பி.சரவணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் தலைவரும், திருப்புகழ் திருஅருட்பா சபை தலைவருமான எம்.தேவராஜ் தலைமையில் டி.சுந்தரமூா்த்தி, ஆா்.பாரதிஅரிஹரன், துளசியம்மாள் தனபால், ஜனாா்த்தனன், டி.ஹரிபிரசாத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.