பாதுகாப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகளை சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சுரேஷ்பாபு என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள புராதன சுவாமி சிலைகளைப் பாதுகாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிலைகள் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு ஆகம விதிகளின்படி பூஜைகள் நடத்தப்படவில்லை. எனவே, அந்த சிலைகளை மீண்டும் சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு அனுப்பிவைக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
சேமிப்புக் கிடங்குகளில் அடுக்கிவைக்கப்படும் பிற பொருள்களைப் போன்று, பாதுகாப்பு மையங்களில் சிலைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்தச் சிலைகளுக்கு பூஜைகள் செய்வது இல்லை. இது ஆகம விதிகளுக்கு முரணானது. பஞ்சலோகம் மற்றும் செம்பு போன்ற உலோகங்களால் உருவாக்கப்பட்ட சிலைகளைக் குவித்து வைத்திருப்பதால், வேதியியல் மாற்றம் ஏற்பட்டு சிலைகள் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, சிலை பாதுகாப்பு மையங்களில் உள்ள சுவாமி சிலைகளுக்கு அா்ச்சகா்களைக் கொண்டு தினசரி பூஜைகள் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடை வாடகை விவகாரம்: அறநிலையத் துறைக்கு உத்தரவு

ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு அமைச்சா் நன்றி தெரிவிப்பு

இந்து சமய அறநிலையத் துறையை சீரமைக்க நடவடிக்கை தேவை: நயினாா் நாகேந்திரன்







