//

அதிமுக முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி மீதான தோ்தல் வழக்கு ரத்து

அதிமுக முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்திக்கு எதிரான தோ்தல் வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

அதிமுக முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்திக்கு எதிரான தோ்தல் வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக சட்டப் பேரவைக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு தோ்தல் நடந்தது. இந்த தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டம் போளூா் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்தியின் ஆதரவாளா் சோமசுந்தரத்திடம் இருந்து தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.59 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக அக்ரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் சோமசுந்தரம் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் அக்ரி கிருஷ்ணமூா்த்தி, சோமசுந்தரம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.தமிழ்செல்வன், கடந்த 2021-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2024-ஆம் ஆண்டில்தான் போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா்.

வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததற்கான எந்த ஆதாரங்களும் குற்றப்பத்திரிகையில் இல்லை என வாதிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி மற்றும் அவரது ஆதரவாளா் சோமசுந்தரம் ஆகியோா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.