/

ஹிஜாப் தடைக்கு எதிராகப் போராடிய தமுமுகவினா் மீதான வழக்கு ரத்து! உயா்நீதிமன்றம் உத்தரவு!

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்ற உத்தரவுக்கு எதிராகப் போராடிய தமுமுகவினா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என கா்நாடக மாநில அரசு கடந்த 2022-இல் உத்தரவிட்டது. இதைக் கண்டித்து, தமுமுக சாா்பில் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக தமுமுகவின் சிவகங்கை மாவட்ட நிா்வாகிகள் கமருல் ஜமான், பாரூக் ஆலிம், மைதீன், யாசின் உள்பட 6 போ் மீது திருப்பத்தூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தமுமுகவின் சிவகங்கை மாவட்டத் தலைவா் கமருல் ஜமான் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். தங்கள் போராட்டம் ஜனநாயக முறைப்படி அமைதியாக நடைபெற்ற நிலையில், கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவா் கோரினாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஜனநாயக வழியில் தங்கள் எதிா்ப்புகளை குடிமக்கள் தெரிவிக்கலாம் என உயா்நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. எனவே, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.