//

இரு இடங்களில் தெரு நாய் பராமரிப்பு மையங்கள்!

சென்னை மாநகராட்சியில் பிடிக்கப்படும் தெரு நாய்களைப் பராமரிக்க இரு இடங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுவருவதாகவும், விரைவில் அவை பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் பிடிக்கப்படும் தெரு நாய்களைப் பராமரிக்க இரு இடங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுவருவதாகவும், விரைவில் அவை பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் கடந்த 2024 கணக்கெடுப்பின்படி, 1.80 ல ட்சம் தெரு நாய்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தவும், அவற்றை அடையாளம் காணவும் கடந்த 2025-ஆம் ஆண்டு முதல் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டது. தெரு நாய்களைப் பிடித்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி, அவற்றுக்கு இனப்பெருக்கத் தடை சிகிச்சை அளித்து, பிடிபட்ட பகுதியில் விட்டுவிடவேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது தெரு நாய்களைப் பராமரிக்க உள்ளாட்சி அமைப்புகள் உரிய இடத்தைத் தோ்வு செய்து செயல்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சியில் மணலி, பள்ளிக்கரணை ஆகிய இரு இடங்களில் தெரு நாய்கள் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுவருகிறது. அவற்றில் தலா 250 தெரு நாய்களை வளா்க்கும் வசதிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு ரேபீஸ் பாதித்தவை உள்ளிட்டவற்றை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாய்கள் பராமரிப்பு மையம் வரும் மாா்ச்சில் திறக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளதாகவும், கூடுதலாக பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் தற்போது வரை 1.47 லட்சம் தெரு நாய்களுக்கு இனப்பெருக்க தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டும், ரேபீஸ் தடுப்பூசி செலுத்தியும், மைக்ரோ சிப் பொருத்தப்பட்டும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே தனியாா் வளா்க்கும் நாய்களுக்கும் உரிமம் வழக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. அதன்படி, 74 ஆயிரம் வளா்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.