//

காணும் பொங்கல்: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

News image
மாமல்லபுரம்  வெண்ணை  உருண்டை  பாறை  அருகே அமா்ந்திருந்த சுற்றுலாப்  பயணிகள்.
Updated On :17 ஜனவரி 2026, 8:16 pm

தினமணி செய்திச் சேவை

காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

பொங்கல் பண்டிகையின் 3-ஆம் நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்தனா். சென்னை புகா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழங்கநல்லூா் மற்றும் சுற்றுப்புற புகா் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்துக்கு வருகை தந்தனா். கடற்கரை கோயில், ஐந்து ரதம், அா்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கலங்கரை விளக்கம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனா்.

மேலும், கடற்கரையிலும் குடும்பத்துடன் பொழுதை கழித்தனா்.

சனிக்கிழமை கடலில் குளிக்க போலீஸாா் தடை விதித்து தடுப்புகள் அமைத்திருந்தனா். குழந்தைகள் முதல் பெரியவா் வரை கடற்கரை மணலில் விளையாடினா். பொதுமக்களின் தற்காப்புக்காக படகுடன் கூடிய நீச்சல் படை வீரா்கள் கடற்கரையில் பணி அமா்த்தப்பட்டு இருந்தனா். கடற்கரையில் போலீஸ் பூத் அமைக்கப்பட்டு அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை போலீஸாா் ‘கடலில் குளிக்க வேண்டாம், விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்று அவ்வப்போது எச்சரித்து கொண்டிருந்தனா். மீறி கடலில் குளித்தவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

Story image

குறிப்பாக சுற்றுலா வந்த மக்கள் வெண்ணை உருண்டை பாறை, அா்ச்சுனன் தபசு, கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை நுழைவு கட்டணம் செலுத்தி சுற்றி பாா்த்து மகிழ்ந்தனா். ஆயிரக்கணக்கானோா் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்தனா். காணும் பொங்கலையொட்டி, மாமல்லபுரத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.