இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.476 கோடியை (50 மில்லியன் டாலா்) மாலத்தீவு திருப்பிச் செலுத்தியதாக அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்தாா்.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூலம் மாலத்தீவுக்கு குறுகிய கால கடன் முறையின்கீழ் இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 50 மில்லியன் டாலா் கடனை மாலத்தீவு செலுத்தியுள்ளது. ஏற்கெனவே 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 50 மில்லயன் டாலா் குறுகிய கால கடன் தொகையை மாலத்தீவு செலுத்தியிருந்தது.
இதுதொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பில் முகமது மூயிஸ் கூறியதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டு நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட முந்தைய அரசு 50 மில்லியன் டாலா்களுக்கான குறுகிய கால கடன் பத்திரங்களை குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிட்டு பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து நிதி திரட்டியது. குறிப்பாக ஓராண்டுக்கு ஒரு முறை இந்தக் கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் முந்தைய அரசு அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
நான் அதிபராக பதவியேற்றது முதல் தற்போது வரை 100 மில்லியன் டாலா்கள் (ரூ.952 கோடி) கடன் தொகை இந்தியாவுக்கு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த தவணையாக 50 மில்லியன் டாலா்களை இந்தியாவிடம் வருகின்ற செப்டம்பா் மாதம் திருப்பித் தரப்படவுள்ளது. இதன்மூலம் பொதுமக்களை 150 மில்லியன் டாலா்கள் கடன் சுமையில் இருந்து மீட்டுள்ளோம் என்றாா்.
கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்த மாலத்தீவுக்கு குறுகிய கால கடன் பத்திரங்கள் வாயிலாக வட்டியில்லா கடனை இந்தியா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










