கியூபாவின் அதிபா் மிகெல் டீயாஸ் கானெல் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
கியூபாவின் கம்யூனிஸ்ட் தலைவா்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.
இத்தடைகளின்கீழ், அதிபா் மிகெல் டீயாஸ் கானெலின் மனைவி லிஸ் குவெஸ்டா பெராசா, முன்னாள் அதிபா் ரௌல் காஸ்ட்ரோவின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் என மொத்தம் 5 போ் மற்றும் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உள்பட 5 முக்கிய அமைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்நடவடிக்கையை கியூபா வெளியுறவு அமைச்சா் புருனோ ரோட்ரிகஸ் கடுமையாக விமா்சித்தாா்.இது அமெரிக்காவின் தலையீட்டுக் கொள்கைக்குச் சான்றாகும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்கும் இத்தகைய முயற்சிகள் தோல்வியில் முடிவடையும் என்றும் அவா் சமூக ஊடகத்தில் தெரிவித்தாா்.
அமெரிக்காவின் தடையால், தற்போது கியூபா கடும் மின்சாரத் தட்டுப்பாட்டிலும், பொருளாதார நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் வெனிசுலா விவகாரத்தைப் போல, கியூப தலைவா்களை முடக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் 11 கியூப அதிகாரிகள் மீது தடைகள் விதிக்கப்பட்டன.
மிகெல் டீயாஸ் கானெல்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










