சைக்கிள் ஓட்டுவோம்...
சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து, ஆவடி மாநகர மகளிர் காவல் துறையினர் உள்பட 130 பேர் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவு பயணித்து விழிப்புணர்வுப் பயணத்தை மேற்கொண்டனர்.


சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து, ஆவடி மாநகர மகளிர் காவல் துறையினர் உள்பட 130 பேர் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 700 கி.மீ. தொலைவு பயணித்து விழிப்புணர்வுப் பயணத்தை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு காவல் துறையில் 1973ஆம் ஆண்டில் ஒரு காவல் உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக் காவலர், இரு காவலர்களைக் கொண்டு பெண் காவல் படை அமைக்கப்பட்டது, 1989இல் அனைத்து அரசு பணிகளிலும் 30 சதவீதம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தவுடன், காவல் துறையில் பெருமளவில் பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றனர்.
இன்றைக்கு முத்திரைப் பதிக்கும் வகையில் 1 டி.ஜி.பி,, 2 கூடுதல் டி.ஜி.பி.க்கள், 14 ஐ.ஜி.க்கள் உள்பட 23,500க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் துறைப் பணியில் உள்ளனர். 1992ஆம் ஆண்டில் தனியாகத் தொடங்கப்பட்ட மகளிர் காவல் நிலையத்தின் தற்போது எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.
காவல் துறையில் பெண்கள் இணைந்ததன் பொன் விழா ஆண்டையொட்டி, கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்த வகையில், "காவல் துறையில் பெண்கள்' எனும் நிகழ்ச்சியை அந்தத் துறையில் பணியாற்றும் பெண் அலுவலர்கள், காவலர்கள் இணைந்து கொண்டாடினர்.
பெண்கள் பாதுகாப்பு, போதை பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் ஆகியவை குறித்து ஆவடி மாநகர மகளிர் காவல் துறையினரின் தொடர் சைக்கிள் பேரணி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் மார்ச் 17இல் தொடங்கியது.
இதன்படி, 120 சைக்கிள்களில் இரண்டு பிரிவுகளாக 109 பெண்கள், சிறப்புப் படை காவல் அதிகாரிகள், உதவியாளர்கள் என 125க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர். இந்தப் பயணமானது 11நாள்களில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட கி.மீ. பயணித்து கன்னியாகுமரி காந்தி மண்டபத்தை 27ஆம் தேதி மாலை வந்தடைந்தது.
பயண அனுபவம் குறித்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, சார்பு ஆய்வாளர்கள் ஆர்.அம்சவள்ளி, சுமதி, மகிபா, ஜெயா, சுகினேஸ்வரி ஆகியோர் கூறியதாவது:
""இன்னும் கிராமங்களில் சைக்கிள்களில் பயணித்து விவசாயப் பணி, வர்த்தகப் பணிகளைப் பெரும்பாலானோர் செய்கின்றனர். காவல் துறை பணிக்கு சிலர் சைக்கிள்களிலேயே செல்லுகின்றனர். ஆனால் நகரப்பகுதியில் சைக்கிளில் பணிக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்தாலும், வாகனங்கள் அதிகரிப்பு, சிக்னல்களில் காத்திருப்பு, சரியான நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படும் போன்ற காரணங்களால் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. புதிதாக விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது, அது மன நிம்மதியை தேடித் தரும்.
இன்று பெரும்பாலானோர்களுக்கு சைக்கிள் ஓட்டுவதே மறந்து போய் விட்டது. இதனால் சரியான முறையில் உடற்பயிற்சி இல்லாமல் பல்வேறு நோய்களுக்கும். உடல் பருமனுக்கும் நிறைய பேர் ஆளாகி விடுகின்றனர்.
வெயில் தாக்கம் அதிகமாக இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல் சைக்கிள் பேரணியில் பங்கு பெற்றோம். பயணமானது உடல் சோர்வு ஏற்படாமல் தைரியத்தை, உண்டாக்கியது. பயணம் செய்த அனைத்து பாதைகளிலும். தங்கும் இடங்களிலும், நல்ல வரவேற்பும், பாராட்டுகளும் கிடைத்தன. அதிகமான தொலைவு என்று கவலைப்படாமல், அனைவரும் சரியான நேரத்துக்கு சென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கை மட்டும் இருந்தது. அது வீண் போகவில்லை.
இனிவரும் காலங்களில் மீண்டும் ஒரு வாய்ப்பு அமைந்தால். பிற மாநிலங்களுக்குக் கூட சைக்கிளிலில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கும் தயாராக இருக்கிறோம். குடும்பம் என்ற ஒரு பொறுப்பு இருந்தாலும், காவல் துறையில் பணியில் இருப்பவர்களுக்கு மக்களும். குடும்பமும் ஒன்றுதான்'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...