ஓரளவு வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நகரத்தில் வசிப்பவர்களாலேயே எதையும் சாதிக்க முடியவில்லை என்ற நிலை உள்ளபோது தந்தையை இழந்தாலும் கூலி வேலை செய்யும் தாயின் உத்வேகம் தந்த ஆதரவால் கோபி அருகே சிறு கிராமங்களில் வசிக்கும் இரு மாணவியர் நீண்ட தூர ஓட்டத்தில் சாதித்து வருகின்றனர்.
இந்த மாணவியர் இருவரும் கோபி கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இங்கு பி.காம் மூன்றாமாண்டு பயிலும் மாணவி ரா.பூங்கொடி. உடன் பிறந்த மூத்த சகோதரர் நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதைப் பார்த்து விளையாட்டாக ஓடத் துவங்கினார் பூங்கொடி. பள்ளிப் படிப்பின்போது மாவட்ட அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற பூங்கொடி, கோபி கலை அறிவியல் கல்லூரியில் விளையாட்டு இட ஒதுக்கீட்டின் மூலம் இடம் பெற்றார்.
ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவில் நடந்த மாரத்தான் போட்டியில் 5-ஆமிடம் பெற்றுத் தனது கல்லூரி வாழ்வில் சாதனைப் பயணத்தைத் துவக்கினார் பூங்கொடி. அதன்பின் 800 மற்றும் 3000 மீட்டர் ஓட்டப் பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பிடித்தார். செஞ்சிலுவைச் சங்கம் நடத்திய ஓட்டப் பந்தயத்தில 800 மீட்டரில் முதலிடம், 3000 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம்,
கோவையில் நடந்த மாநில அளவிலான மாரத்தான் போட்டியில் இரண்டாமிடம், பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம், சாலை ஓட்டத்தில் முதலிடம் என பூங்கொடியின் சாதனைப் பயணம் தொடர்
கிறது.
அவருடைய வெற்றிக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 21 கி.மீ. மாரத்தான் போட்டியில் 8 ஆண்டு கால சாதனையை முறியடித்தது குறிப்பிடத்
தக்கது.
வசந்தாமணி: கோபி அருகே கலிங்கியம் கிராமத்தைச் சேர்ந்த ஈ.வசந்தாமணி, கோபி கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு இயற்பியல் படிக்கிறார். கூலி வேலை செய்யும் தாய் சாந்தியின் ஆதரவு காரணமாக பிளஸ் 1 படிக்கும்போதிருந்து விளையாட்டில் சாதிக்கத்துவங்கினார்.
கல்லூரியில் விளையாட்டு இட ஒதுக்கீட்டில் சேர்ந்து கோவையில் நடந்த மாநில அளவிலான நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் பயணத்தைத் துவக்கினார்.
பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான சாலை ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார்.
அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டிகளில் ஹரியானா மாநிலம் ரோட்டக் மற்றும் மேற்கு வங்க மாநிலம் கல்யாண் பல்கலைக்கழகத்தில் நடந்த போட்டிகளில் பாரதியார் பல்கலைக்கழகம் சார்பிலும் பங்கேற்றார்.
இந்த அனுபவம் வசந்தாமணிக்கு மிகப் பெரிய மாற்றத்தைத் தந்தது.
இது தவிர மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பூங்கொடி மற்றும் வசந்தாமணி ஆகியோர் பங்கேற்றுக் கல்லூரிக்கும் ஈரோடு மாவட்டத்துக்கும் பல்வேறு சிறப்புகளைச் சேர்த்து வருகின்றனர்.