/

அங்கிள் ஆன்டெனா: மருத்துவமனைகளில் மருத்துவரின் உடையும் நோயாளிகளுக்குத் தரப்படும் அங்கியும் பச்சை வண்ணத்திலும் இருப்பதற்குக் என்ன காரணம்?

மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை செய் யும் மருத்துவரின் உடை பெரும்பாலும் பச்சை வண்ணத்திலும், நோயாளிகளுக்குத் தரப்படும் அங்கியும் அதே பச்சை வண்ணத்திலும் இருப்பதற்குக் காரணம் என்ன?

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:14 am

ரொசிட்டா

மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை செய்யும் மருத்துவரின் உடை பெரும்பாலும் பச்சை வண்ணத்திலும், நோயாளிகளுக்குத் தரப்படும் அங்கியும் அதே பச்சை வண்ணத்திலும் இருப்பதற்குக் காரணம் என்ன?

1900-களின் தொடக்கத்தில் மருத்துவர்கள், செவிலியர்களின் உடை மட்டுமல்லாது, சுற்றுப்புறசூழலும் (சுவர், மெத்தை விரிப்பு, தலையணை, ஸ்கிரீன் போன்றவை) வெள்ளை நிறத்தில்தான் அமைக்கப்பட்டிருந்தன. ஏதாவது சிவப்பு நிறம் நிறைந்த படத்தை 1 நிமிடம் உற்றுப் பாருங்கள். பின்னர், உடனே வெள்ளை நிறம் அதிகமுள்ள படத்தைப் பாருங்கள். வெள்ளை நிறத்தில் பச்சை அல்லது நீலப்பச்சை நிறம் தெரிகிறதா? இது வெறும் மாயை இல்லை. இதற்குப் பின்னால் உள்ள அறிவியல்தான் மருத்துவமனையில் பச்சை நிறம் உபயோகிக்கக் காரணம்.

ஒரு மருத்துவர், அறுவைச் சிகிச்சையின் போது நீண்ட நேரம் நோயாளியின் உடலைக் கையாளுவதால் இரத்தத்தின் நிறமான சிவப்பு நிறத்தை அதிக நேரம் உற்று நோக்க நேரிடும். இதன் காரணமாக, கண்களில் உள்ள கூம்பு வடிவ செல்கள் (வண்ணப் பார்வைக்குக்காரணமானவை) உணர்விழக்க அரம்பித்து, மூளையின் சிவப்பு நிற சிக்னல் மங்க அரம்பிக்கும். இதனால், அவரால் சிவப்பு நிறத்தின் வகைகளை இனம் காண முடியாமல் போய், மனித உடலில் நுணுக்கங்களைக் காண்பது கடினமாக இருக்கும்.

இதனால் அவர் தன் பார்வைக்குப் புத்துணர்வு தர வேண்டி, சுற்றுப்புற வெள்ளை நிறத்தைப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும். உடனே, பார்வையைத் திருப்பினால் நோயாளியின் சிவப்பு நிற உறுப்புகள் அனைத்தும் பச்சை நிறமாகத் தெரியும்.

வெள்ளை ஒளியில் வானவில்லிலின் அனைத்து வண்ணங் களும் இருப்பதால், வண்ணப் பார்வையில் சிவப்பு ஏற்கனவே தீர்ந்துவிட்டதால், மூளை பச்சை சிக்னலைத் தூண்டிவிட்டு பச்சை நிறமாகக் காட்டுகிறது. வண்ணச் சக்கரத்தில் சிவப்புக்கு எதிரான வண்ணம் பச்சை என்பதால் இந்த நிலை ஏற்படுகிறது.

இதனால் ஏற்படும் கண்ணயர்வைத் தடுப்பதற்காக அதுவரை மருத்துவமனையில் (அறுவைச்சிகிச்சை அரங்கில்)பயன்பாட்டில் இருந்த வெள்ளை நிறத்திற்குப்பதிலாக பச்சை, இளம்பச்சை மற்றும் நீலப்பச்சை நிறங் களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த ஏற்பாடு, 1917-களில் தொடங்கி இரண்டாம் உலகப்போருக்குப்பின் பரவலாகியது. பச்சை நிறம் நேர்மறை எண்ணங்களையும், இயற்கையின் நிறமாதலால் ஓர் அமைதி, ஆறுதல் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.