உக்ரைன் மீட்புப் பணியில் பெண் விமானிகள்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க, உயிர் சேதம், உடைமை சேதம் , துன்பம், துயரத்திற்கு ஆளானவர்கள் உக்ரைன் குடிமக்கள் மட்டுமல்ல.


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க, உயிர் சேதம், உடைமை சேதம் , துன்பம், துயரத்திற்கு ஆளானவர்கள் உக்ரைன் குடிமக்கள் மட்டுமல்ல. உக்ரைனில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவ, மாணவிகளும், வேலை நிமித்தம் தங்கியிருக்கும் இந்தியர்களும்தான்..!
இந்தியர்களை உக்ரைனிலிருந்து பாதுகாப்பாகக் கொண்டு வரவேண்டிய கட்டாயம், கடமை இந்திய அரசிற்கு உண்டு. சுமார் 25000 இந்தியர்களை உக்ரைனிலிருந்து விமானம் மூலம் "ஆப்பரேஷன் கங்கா' மீட்புப் பணி மூலம், இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள்.. இந்த மீட்புப் பணியில் இரண்டு பெண் விமானிகள் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் கொல்கத்தாவைச் சேர்ந்த 24 வயது மஹாஸ்வேதா சக்ரவர்த்தி, ஹரியாணாவைச் சேர்ந்த கேப்டன் ஷிவானி கல்ரா.
உக்ரைனிலிருந்து தப்பிய இந்தியர்கள் அண்டை நாடுகளான ஹங்கேரி, போலாந்திற்குள் நுழைந்தனர். மஹஸ்வேதா 800 இந்தியர்களை ஹங்கேரி, போலந்து நாட்டிலிருந்து இந்தியா கொண்டுவந்துள்ளார். இந்த மீட்புப் பணிக்காக பிப்ரவரி 27 லிருந்து மார்ச் 7 வரை, ஆறு முறை ( போலந்திலிருந்து 4 முறை, ஹங்கேரியிலிருந்து 2 முறை) இந்தியாவிலிருந்து விமானத்தை செலுத்தி
யிருக்கிறார்.
"800 இந்தியர்களை பாதுகாப்பாக விமானத்தில் ஏற்றி இந்தியா கொண்டுவந்து சேர்த்தது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இந்த 800 பேர்களில் இருபது வயதுக்கும் கீழ் இருந்தவர்கள் அதிகம் மாணவர்கள்.
பலர் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். பசி, தாகம், கடுங்குளிர், தூக்கமின்மை என்று பலவற்றையும் சகித்து தப்பி வந்த அவர்கள் கண்களில் மரண பீதி நிழலாடியது. எப்படியோ உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளுக்குள் புகுந்தனர். இந்தப் புனிதமான மீட்புப் பணியில் நானும் ஒரு அங்கம் ஆனதில் எனக்குப் பெருமை.
நான் தனியார் விமான நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளாக விமானியாகப் பணிபுரிகிறேன். திடீரென்று அர்த்த ராத்திரியில் அலைபேசி ஒலித்தது. மீட்புப் பணிக்கு வர வேண்டும் என்று சொன்னார்கள். சில உடைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். நேராக விமானத்தில் இஸ்தான்புல் சென்றேன். அங்கே இருந்துதான் மீட்புப் பணிகளைத் தொடங்க வேண்டும்.
இஸ்தான்புல்லிலிருந்து போலந்து இரண்டரைமணி நேரப் பயணம். இந்த மீட்புப் பணியில் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் கலந்து கொண்டன.
இந்திய விமானங்கள் மொத்தம் 75 முறை மீட்புப் பணிக்காகப் பறந்தன. விமானத்துக்குள் வந்ததும் இந்தியர்களுக்கு உணவு, குடிக்கும் பானங்கள் வழங்கினோம். பலரும் அதை சாப்பிடாமலே கையில் வைத்திருந்தனர்.
"எங்களுக்கு ஒன்றும் வேண்டாம்.... இந்தியா போனால் போதும்' என்றனர். இதிலிருந்து, அவர்கள் மனநிலை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
கரோனா காலத்திலும் வெளிநாடுகளிலிருந்து இந்தியா கொண்டுவர "வந்தே பாரத்' மீட்புப் பணியிலும் நான் பங்கு பெற்றிருந்தேன்'' என்கிறார் மஹாஸ்வேதா சக்ரவர்த்தி.
"ஆபரேஷன் கங்கா' மீட்புப் பணியில் இணைய விருப்பம் உண்டா என்று என்னிடம் கேட்ட போது, எதையும் யோசிக்காமல் "எப்போது வர வேண்டும்' என்று கேட்டேன் என்கிறார் கேப்டன் ஷிவானி கல்ரா.
ஷிவானி ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான ஓட்டியாக இருக்கிறார். வீட்டில் சகோதரனின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் மீட்புப் பணியில் இணைய ஷிவானி விருப்பம் தெரிவித்தார்.
"உக்ரைனிலிருந்து ருமேனியா, ஹங்கேரி வந்து சேர்ந்த இந்தியர்களை இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும். பீதியில் உரைந்திருந்த இந்தியர்களின் முகம் எங்களைக் கண்டதும் கொஞ்சம் பிரகாசம் ஆனது. அவர்களுக்கு ஆறுதல் சொன்னோம். 250 பேர்களை நாங்கள் இந்தியா கொண்டு வந்தோம். தில்லி வந்து சேர்ந்ததும் மீண்டு வந்தவர்களின் பெற்றோர்கள் எங்களை கைதட்டி வரவேற்றார்கள். அதுதான் எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்'' என்கிறார் ஷிவானி கல்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...