சுறுசுறுப்பு, வேகம், கம்பீரம் என்பதற்கு உருவம் கொடுத்தால் அது நேதாஜியின் வடிவம் தான். சீருடையில் நிமிர்ந்து நின்றால் அவருடைய முகத்தில் காணும் தேஜஸ் எதிரில் இருப்பவரை அடிபணியச் செய்து அவரை தெய்வமாகக் கொண்டாடத் தூண்டும். விரோதிக்கும் அவரை வணங்கத் தோன்றும். அனைவர் நடுவிலும் உரையாற்றும்போது அவரின் வேகமும் வீரமும் கேட்போர் மனங்களிலும் அதே உணர்வை ஏற்படுத்தும். நமக்குள்ளும் அந்த வீரம் புது உத்வேகத்தைத் தரும். அதே நேரத்தில் தனித்து உரையாடும் போது இனிமையாக கனிவான பேச்சு இருக்கும். அன்பான மனம் கொண்டவர். அவரது அக்கறை நம்மைக் கட்டிப்போடும். ஆண்- பெண் பேதமற்ற பார்வை கொண்டவர். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் நாம் எதையும் சாதிக்க முடியாது என்ற சிந்தனையும் அதற்கே உரிய செயல்பாடும் கொண்டவர்.