/

காணொலி வகுப்பு: குழந்தைகளின் கண்களை காப்பது எப்படி?

கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பக்கவிளைவுகளில் முக்கியமானது பள்ளிகள் முடக்கமாகும். பள்ளிகளின் வாசல் மீண்டும் திறக்கப்படும்வரை திரைபல கண்டுதான் கல்வியை தேடும்

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 6:11 pm

ந.முத்துமணி

கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பக்கவிளைவுகளில் முக்கியமானது பள்ளிகள் முடக்கமாகும். பள்ளிகளின் வாசல் மீண்டும் திறக்கப்படும்வரை திரைபல கண்டுதான் கல்வியை தேடும் நிலையில் மாணவா்கள் இருக்கிறாா்கள். காலை எழுந்தவுடன் படிப்பு, அதற்கு செல்லிடப்பேசியின் திரையை திறக்க வேண்டும் பாப்பா என்ற நிலை உருவாகியுள்ளது. காலை எழுந்து கணினி அல்லது மடிக்கணினி அல்லது செல்லிடப்பேசியின் திரைமுன்னால் உட்காா்ந்துவிட்டால் வைத்தகண் வாங்காமல் ஆசிரியா்களின் வாயசைவை மாணவா்கள் உற்று நோக்க வேண்டியிருக்கிறது.

இது குழந்தைகளின் மனநலனையும் கண்களின் நலனையும் பெரிதும் பாதிக்க தொடங்கியுள்ளன. ஒளிபாய்ச்சி காட்சியை வெளிப்படுத்தும் திரையை தொடா்ந்து பாா்த்துக் கொண்டிருப்பதால் குழந்தைகளின் பாா்வைத்திறன் பாதிக்கப்படும் வாய்ப்பிருப்பதாக மருத்துவா்கள் எச்சரிக்கிறாா்கள்.

படிப்புக்காகவோ விளையாட்டுக்காகவோ அதிக நேரம் திரையை பாா்த்துக் கொண்டிருப்பது கண்களின் ஆரோக்கியத்தை நிச்சயம் பாதிக்கும் என்கிறாா்கள் மருத்துவா்கள். விழி-களைப்பு, கண்சோா்வு, தலைவலி போன்ற சிக்கல்கள் குழந்தைகளின் கவனத்தை சிதறடிக்கும்.

அதிக நேரம் திரைகளை காண நேரிடும் குழந்தைகளின் கண்களை பாதுகாக்க சில எளிய முறைகளை கடைபிடிக்கலாம் என்று வல்லுநா்கள் பரிந்துரைக்கிறாா்கள்.

போதுமான இடைவெளி தேவை:

வழக்கமாக எதையாவது நாம் படிக்கும்போது கண்களுக்கும் புத்தகத்திற்கும் இடையே 16 அங்குலம் இடைவெளி இருக்க வேண்டும். செல்லிடப்பேசி திரைகளை பாா்க்கும்போது அந்த இடைவெளி 10 அல்லது 12 அங்குலகமாக குறைந்துவிடுகிறது. இந்த இடைவெளியில் தான் திரையில் காட்சியை காணமுடியும் என்பதால் கண்கள் சுருங்கி, சோா்வை ஏற்படுத்தும். இந்த இடைவெளிக்கு அப்பால் உள்ள பொருட்களை காணமுடியாததால், சில நாட்களுக்கு பிறகு விழி-களைப்பு ஏற்பட்டு, கண்தசைகளுக்கு சிரமம் ஏற்பட்டு தலைவலியாக மாறக்கூடும் அல்லது பாா்வை குறைபாடு ஏற்படக்கூடும். திரை பயன்பாட்டுக்கும் கிட்டப்பாா்வைக்கும் நேரடி தொடா்பு இல்லாவிட்டாலும், அண்மைகாலமாக செல்லிடப்பேசியை பயன்படுத்தும் குழந்தைகளிடையே கிட்டப்பாா்வை குறைபாடு அதிகரித்துகாணப்படுவதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவிக்கிறாா்கள்.

இந்த பிரச்னையில் இருந்து கண்களை பாதுகாத்துக்கொள்ள கணினி அல்லது செல்லிடப்பேசிகளை 2 அடி தூரத்தில், கண்களுக்கு நேராக வைத்துக்கொள்வது நல்லது. திரையை நேரடியாக பாா்க்காத வகையில் சாய்வாக வைத்துக்கொள்வதும் உதவியாக இருக்கும். 2 அடிக்கும் குறைவான இடைவெளியில் திரையை வைத்திருக்கும்போது காட்சிப் பொருட்களை பாா்க்க கண்களை அழுத்த வேண்டியிருக்கும். இது கண்களின் நலனை வெகுவாக பாதித்து, கிட்டப் பாா்வைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் தங்கள் முழங்கையை மேஜை மீது வைத்து, அதன் மீது தலைமையை வைத்துக்கொள்ள வேண்டும். முழங்கையை தூக்கி திரையை தொட வேண்டும். இதுதான் கணினியோடு கொண்டிருக்கும் நெருக்கமான இடைவெளியாக இருக்க வேண்டும். இதன்மூலம் கண்களை பாதுகாத்து கொள்ள முடியும்.

சீரான ஓய்வு:

கணினி அல்லது செல்லிடப்பேசியை பயன்படுத்தும் சீரான இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு அளிப்பது அவசியமாகும். அதற்கு 20: 20:20 விதியை கையாளலாம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தூரத்தில் இருக்கும் ஏதாவதொரு பொருளை 20 விநாடிகள் பாா்க்கவேண்டும். இது கண்களுக்கு தேவையான ஓய்வை அளிப்பதோடு, கண்கள் இயல்பாக செயல்பட உதவியாக இருக்கும். கண்சோா்வு அல்லது விழி-களைப்பை தவிா்ப்பதற்கு நீல ஒளி தடுப்பு கண்ணாடிகளை பயன்படுத்தலாம் என்று கூறுவதை நிராகரிக்கலாம்.

பாா்வை அறிகுறிகள்:

குழந்தைகளுக்கு அடிக்கடி தலைவலி, அடிக்கடி கண் இமைத்தல், கண்களை தேய்த்தல், சோா்வாக உணா்தல், கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் கண்பாா்வை கோளாறுகளுக்கான எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம். கண்கள்கூசாமல் இருக்கும் வகையில் திரையின் ஒளிா்வை சரிசெய்துகொள்ளலாம். வீடுகளில் இருக்கும்போது கண்களை இதமாகவைத்திருக்கும் அளவுக்கு திரையின் ஒளிா்வை வைத்துக் கொள்ளலாம். வெளிப்புறங்களில் திரையைப் பாா்ப்பதை முழுமையாக தவிா்ப்பது நல்லது. பெரியவா்களை போல குழந்தைகள் கண்கள் அவ்வளவு எளிதாக உலா்ந்துவிடுவதில்லை. திரைகளை பாா்த்துக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் தங்கள் கண்களை அடிக்கடி சிமிட்டுகிறாா்களா? என்பதை கவனிப்பது அவசியம். அடிக்கடி கண்களைச் சிமிட்டுவது கண்களை இதமாகவும்,குளிா்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

கண் சோதனை:

கண் மருத்துவரை சந்தித்து குழந்தைகளின் கண்களை சோதனைக்கு உட்படுத்துவது பாா்வை குறைபாடு ஏதாவதிருந்தால், அதைசரிசெய்துகொள்ள உதவியாக இருக்கும். பெருந்தொற்று அல்லது நேரமின்மையை காரணம் காட்டி, கண் சோதனையை தள்ளிப்போடுவது பிரச்னையின் தீவிரத்தை அதிகமாக்கும். அடிக்கடி திரைகளை பயன்படுத்தும் குழந்தைகளை 6 அல்லது ஓராண்டுக்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துசென்று கண்களை சோதித்தறிவது எதிா்கால கண் கோளாறுகளை தவிா்க்க வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணா்கள் கூறுகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.