/

வலைத்தளம் ஏற்படுத்திய மாற்றம்! - நடிகை ரம்யா பாண்டியன்

மேக்கப் போட்டு நடித்த  மூன்று  முழு நீளத் திரைப்படங்கள் கொண்டு வந்து சேர்க்காத   புகழை, பிரபலத்தை  வலைதளத்தில் பிரசுரமான,  மேக்கப் கொஞ்சம் கூட இல்லாமல்  பிரமாண்ட செட்  இல்லாமல், விலையுயர்ந்த

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:04 am

சுதந்திரன்

Story image

மேக்கப் போட்டு நடித்த மூன்று  முழு நீளத் திரைப்படங்கள் கொண்டு வந்து சேர்க்காத புகழை, பிரபலத்தை வலைதளத்தில் பிரசுரமான, மேக்கப் கொஞ்சம் கூட இல்லாமல் பிரமாண்ட செட் இல்லாமல், விலையுயர்ந்த டிசைனர்  உடைகள் இல்லாமல், சாதாரண  சேலை உடுத்தி  மொட்டைமாடியில் எடுக்கப்பட்ட  சில  படங்கள்  கொண்டு வந்து சேர்த்துள்ளன. 

ரம்யா பாண்டியன். இன்று தமிழ் நாட்டின்  ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை. ஒரே ஒரு இரவில் சமூக தளங்களின் கொண்டாட்ட அதகளமாகியிருக்கும்   ரம்யாவுக்கு வயது முப்பது என்றால் யாரும் நம்பவே   மாட்டார்கள்.

அதைவிட ஆச்சரியம்  ரம்யா   பச்சை தமிழ்ப் பெண். தாமிரவருணி தவழும் திருநெல்வேலிப் பெண். வருஷத்திற்கு ஒரு முறை தென்காசி போகும் பெண். வாழ்வது சென்னையில் என்றாலும் நண்பிகள் ஒன்றிரண்டுடன் இருக்கும் பெண். அண்ணா பல்கலைக் கழகத்தில்  பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்...

ரம்யா "மானே தேனே ..பொன்மானே' குறும்படத்தில் அறிமுகமானவர்.  "டம்மி டப்பாசு', "கூந்தலும் மீசையும்', "ஜோக்கர்', "ஆண் தேவதை' படங்களில் ரம்யா நடித்திருந்தாலும் தமிழ்நாட்டு ரசிகர்கள் ரம்யாவை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை  என்பதுதான் நிஜம்.

வலைதளங்களில் புயலாக உருவெடுத்திருக்கும் இப்போதைய படங்களை எடுத்தவர் சுரேந்திரன் என்பவராம். முன்னர் பல போட்டோகிராபர்கள் படங்களை எடுத்து வெளியிட்டாலும், இப்போது  சுரேந்தர் எடுத்த படங்கள்தான் நட்சத்திர அந்தஸ்தை ரம்யாவுக்கு போனஸாக வழங்கியிருப்பதுடன் சில பட வாய்ப்புகளையும்  ரம்யாவிடம் கொண்டு வந்திருக்கிறது. 

“பதவி உயர்வு கிடைத்தபோதுதான்  எனக்கு  "மானே தேனே  பொன்மானே' கூறும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.  இயக்குநர் மணிரத்னம் உதவியாளர் ஷெல்லி  இயக்கிய படம். படிக்கும் போதும் சரி.. வேலை பார்க்கும் போதும் சரி.. "நீ நடிக்கலாமே.." என்று  நண்பர்கள் உசுப்பேற்றுவார்கள். அது  பலித்தே விட்டது.. “

Story image

"படங்களில் நடிப்பதில் இடைவெளி ஏற்பட்டிருப்பது உண்மை. அதற்காகப்  பட வாய்ப்புகள் வரவில்லை என்று அர்த்தமல்ல.. எனக்குப் பிடித்த கதை, பாத்திரங்கள் இல்லாததால்  நான் சில படங்களை ஒதுக்கிவிட்டேன். இரண்டு குழந்தைகளுக்குத்  தாயாக   நடித்தவர்  அந்த  மாதிரி  வேடங்களில்  மட்டும் நடிப்பார்  என்று  அவர்களாகவே  முடிவு  செய்திருக்கலாம்  கவர்ச்சி காட்டவும், பட வாய்ப்புகளை பெறவும் இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.அது உண்மையில்லை. படம் பிடிப்பது இதற்கு முன்னும் நடந்திருக்கிறது. எனது உடல் எடை, தோற்றம் எப்படி உள்ளது...  அவற்றில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டுமா  என்று சுய மதிப்பீடு செய்து கொள்ளத்தான்  இந்தப் படங்களை எடுத்தோம்.  அந்தப் படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிதான். படங்களில் பாத்திரத்திற்கு ஏற்றமாதிரி கவர்ச்சியாகவும் கவர்ச்சியில்லாமலும் நடிப்பேன்... சாதாரண  புடவை  உடுத்தி எடுக்கப்பட்டப் படங்கள் எப்படி இந்த அளவுக்கு வைரல் ஆனது என்பதுதான் எனக்கு இன்னமும்  புரியாத புதிர் ''  என்கிறார் ரம்யா பாண்டியன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.