ஆனந்தவிகடன் வார இதழைக் கோபுலுவின் ஓவியங்கள் நிறைய அலங்கரித்தன. ஜெகசிற்பியனின் ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம், தேவனின் துப்பறியும் சாம்பு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், ராவ்பகதூர் சிங்காரம், சுந்தாவின் யாருக்கு மாலை, சாவியின் வாஷிங்டனில் திருமணம், நா.பார்த்தசாரதியின் நித்திலவல்லி போன்ற பல தொடர்களின் பாத்திரங்கள், விகடனில் கோபுலுவின் தூரிகையால் உயிர்பெற்றன. அண்மையில் மறைந்த ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் என்ற அழகியல் செறிவு நிறைந்த தொடர்கதையின் கதாநாயகன் ஹென்றிக்கு கோபுலு வரைந்த உயிரோவியம் மறக்க இயலாதது.