டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

ஆயுள்காக்கும் ஆயூர்வேதம்: தொண்டை வறட்சியும் மலச்சிக்கலும்!

குடலின் வாயுவின் வறட்சியான குணம் இயற்கையாகவே வயோதிகத்தில் கூடுகிறது. இதனால் குடல் அசைவுகள் தடைபட்டு மலச்சிக்கலுக்குக் காரணமாகிறது. வறட்சிக்கு நேர் எதிரான நெய்ப்பு எனும் குணத்தை நீங்கள்

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:46 pm

எஸ். சுவாமிநாதன்

எனக்கு வயது 75. கடந்த சில வருடங்களாகவே மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது. தற்போது தீவிரம் அடைந்துள்ளது. தொண்டை அடிக்கடி வறண்டு போகிறது. ஒரு நாளைக்கு  4 லிட்டர் வரை தண்ணீர் அருந்தினாலும் பலனில்லை. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?

பெயர் வெளியிட விரும்பாத வாசகர், தில்லை நகர், திருச்சி.

குடலின் வாயுவின் வறட்சியான குணம் இயற்கையாகவே வயோதிகத்தில் கூடுகிறது. இதனால் குடல் அசைவுகள் தடைபட்டு மலச்சிக்கலுக்குக் காரணமாகிறது. வறட்சிக்கு நேர் எதிரான நெய்ப்பு எனும் குணத்தை நீங்கள் உள்ளும் புறமுமாகப் பெற வேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறது. வாயுவால் இறுக்கம் அதிகமாகி குழாய்கள் வழியே செல்பவை தடைபடும் நிலையில், தோலில் வெதுவெதுப்பாக எண்ணெய்யைத் தடவி வந்தால், குடலில் ஏற்படும் தடையானது நீங்கிவிடும். மயிர்க்கால்களில் இணைந்துள்ள சிறு மயிரிழை போன்ற ரத்தக் குழாய்கள் உள்ளிருக்கும் அழுக்கை வெளிப்படுத்திவிட்டு எண்ணெய் தேய்த்தலின் மூலம் பெற்ற ஊட்டச்சத்தை உள்ளிழுத்து ரத்தத்துடன் கலக்கச் செய்கின்றன. வாய் வழியே செல்வதைவிடத் தோல் வழியே சென்று சேரும் நெய்ப்பானது எளிதானது, விரைவானதும் கூட. இதனால் குடலுக்குத் தேவையான மென்மையும், நெகிழ்ச்சியும், தடையின்மையும், சீரான வேகமும் கூடும். உட்புறமாக அதாவது வாய் வழியாக நெய்ப்பைக் குடலில் பெறுவதற்கு எள், பால், தேங்காய் போன்றவை உதவும்.

குடலின் அடிபாகத்தில் வாயுவினால் ஏற்பட்ட அதே வறட்சி போன்றதொரு நிலையை, தொண்டையிலும் வாயு ஏற்படுத்துகிறது. நெய் எண்ணெய்ப் பசையின்றி வறட்சியான பண்டங்களைச் சாப்பிடுதல், பச்சைக் கறிகாய்கள் போதுமான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளாமல் தனி வறட்டுச் சாதமாகவே சாப்பிடுதல், பால், பழம்,  தண்ணீர் சேர்த்துக் கொள்ளாதது, பக்குவம் சரியாக ஆகாத உணவு, உலர்ந்து போன காய்கள், மிளகாய், மிளகு, பெருங்காயம் போல குடலில் இருக்கும் நீரின் அம்சத்தை சுண்ட வைக்கும் உணவுகள் போன்றவை தொண்டை வறட்சிக்குக் காரணமாகலாம்.

மலச்சிக்கல் மற்றும் தொண்டை வறட்சியைப் போக்க - காலையில் 5 மணிக்கு ஒரு பெரிய டம்ளர் (சுமார் 500 மி.லி.) வெந்நீர் சாப்பிடவும். காலையில் 7 மணிக்கு 2 வாழைப் பழங்களை உருக்கிய நெய்யில் தோய்த்துச் சாப்பிட்டு 1 டம்ளர் (சுமார் 300 மி.லி.) காய்ச்சிய பால் குடிக்கவும். காலை 10 மணிக்குள் சூடான சாதத்தில் நெய்விட்டுப் பிசைந்து பச்சைக் காய்கறிகள் வேக வைத்து பருப்பு ரசம், விளாவிய மோர் சேர்த்துச் சாப்பிடவும். பகல் 1 மணிக்கு ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, தக்காளி, சீமையத்திப் பழம், ஆப்பிள் பழம்  இவற்றில் கிடைத்த பழங்களைச் சாப்பிடவும். மேலே கொஞ்சம் வெந்நீர் அருந்தவும்.

மாலையில் இளநீர் சாப்பிடவும். இரவில் சூடான பாலை சாதத்துடன் கலந்து சாப்பிட நல்லது அல்லது வேக வைத்த கறிகாய் கூட்டுச் சேர்த்து கூட்டு அன்னம் சாப்பிடலாம். ராத்திரி படுக்கும் முன் 1 டம்ளர் வெந்நீர் அருந்தவும்.

ஆயுர்வேத மருந்துகளில் ஸýகுமாரகிருதம், ஸýகுமார லேகியம் இவை இரண்டு மருந்துகளும், நெய்யும், ஆமணக்கெண்ணெய்யும் வாயுவின் வறட்சியைப் போக்கக் கூடிய மருந்துகளையும் சேர்த்துத் தயாரிக்கப்படுபவை. மலச்சிக்கலுக்கு நித்திய உபயோகத்துக்கு உத்தமம். தொடர்ந்து சாப்பிடலாம். திரிபலா சூரணம் 3 -5 கிராம் அளவு ராத்திரியில் படுக்கும் முன் கொஞ்சம் நெய், தேன் கலந்து சாப்பிடவும். அதன் பிறகு சூடான அரை கிளாஸ் பால் சாப்பிட, மலப் பிரவிருத்தியை ஒழுங்காகச் செய்யும், கண்களுக்கும் நல்லது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.