மனிதர்களுடைய குடல் பகுதி கதகதப்பான சூழ்நிலையில், கிருமி தொற்றை உடலின் உட்புறப் பகுதிகளில் பரவவிடாமல், அவ்விடத்திலேயே அழித்து வெளியேற்றிவிடுகிறது. இந்தக் கதகதப்பை ஏற்படுத்தித் தரும் பாசகபித்தம், தன் இருப்பிடமாகிய குடலின் மத்தியப் பகுதியிலேயே தங்கியிருந்து, உடல் தாதுக்களில் உள்ள வெதுவெதுப்பான சூழ்நிலையைப் பாதுகாக்கிறது. குடலின் மையப் பகுதி சில்லிட்டுவிட்டால், தாதுக்களில் பரவியுள்ள சூடானது, ஆவேசம் கொண்டு, உடல் சூடாகி, காய்ச்சலை உணர்த்துகிறது. இந்த ஆவேசமான நெருப்பானது, குடலை நோக்கிப்பயணித்து, அங்குள்ள சில்லிட்டநிலைக்குக் காரணமான ஒரு காரியத்தை அழிக்க முற்படுகிறது. அந்த வஸ்துவானது அழிந்து, பாசக பித்தத்தின் செயல்பாடு, மீண்டுவிடும் நிலையில், தாதுக்களில் அடங்கியுள்ள நெருப்பானது சாந்தமாகி, தம்முடைய தொழிலாகிய உணவின் சாராம்சத்தையும், சக்கையான மலப்பகுதியையும் பிரிக்கிறது. ஆக, பாசக பித்தமும், தாதுக்களில் பரவியுள்ள நெருப்பும் பரஸ்பரம் உதவி செய்து கொண்டு, மனிதர்களுடைய உயிரை, நோயற்றதன்மையுடன் ஆரோக்கியமான முறையில் நிலை நிறுத்தச் செய்கின்றன.