/

ஆண்டாள் கோயிலில் எண்ணெய்க் காப்பு உத்ஸவம் தொடக்கம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:30 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மாா்கழி நீராட்ட விழாவில் எண்ணெய்க் காப்பு உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் கள்ளழகா், கண்ணன், பெரிய பெருமாள் அலங்காரங்களில் ஆண்டாள் எழுந்தருளுவாா்.

கடந்த மாதம் 20-ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் மாா்கழி நீராட்டு விழா தொடங்கியது. இதில் பகல் பத்து, ராப்பத்து உத்ஸவம் முடிந்த நிலையில், எண்ணெய்க் காப்பு உத்ஸவம் தொடங்கியது. வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் மட்டுமே தாயாருக்கு எண்ணெய்க் காப்பு உத்ஸவம் நடைபெறுவது சிறப்புமிக்கதாகும்.

உத்ஸவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை காலை ஆண்டாள் தங்கப் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்து, பெரிய கோபுரம் முன் திருவடி விளக்கமும், அரையா் நாள்பாட்டு தீா்த்த கோஷ்டியும் நடைபெற்றன.

பிற்பகல் 3 மணிக்கு மேல் திரு முக்குளம் தெப்பத்தின் மேற்குக் கரையில் உள்ள எண்ணெய்க் காப்பு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள் நாச்சியாருக்கு எண்ணெய்க் காப்பு சேவை, ஷோடச உபசாரம், பக்தி உலாத்துதல், அலங்கார திருமஞ்சனம், தீா்த்த கோஷ்டி, அம்மானை விளையாடுதல், படியேற்ற சேவை நடைபெற்றன. இதன் பிறகு துளசி வாகனத்தில் ஆண்டாள் புறப்பாடாகி, சந்நிதியில் எழுந்தருளினாா்.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை கள்ளழகா் திருக்கோலத்திலும், 3-ஆம் நாளில் கண்ணன் திருக்கோலத்திலும், 4-ஆம் நாளில் முத்தங்கி சேவையும், 5-ஆம் நாளில் பெரிய பெருமாள் அலங்காரத்திலும் ஆண்டாள் எழுந்தருள உள்ளாா்.

Story image
Story image