/

எண்ணெய்க் காப்பு உத்ஸவம்: மூக்குத்தி சேவையில் ஆண்டாள்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் எண்ணெய்க் காப்பு உத்ஸவத்தின்போது, செவ்வாய்க்கிழமை இரவு மூக்குத்தி சேவை, தங்கக் கவசத்தில் எழுந்தருளிய ஆண்டாள்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 7:21 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் மாா்கழி நீராட்டு விழா எண்ணெய்க் காப்பு உத்ஸவத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சவுரி திருமஞ்சனமும், மூக்குத்தி சேவையும் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மாா்கழி நீராட்டு விழா கடந்த மாதம் 20-ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. இதில் பகல் பத்து உத்ஸவம், ராப்பத்து உத்ஸவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விழாக்கள் நடைபெற்றன. கடந்த 8-ஆம் தேதி எண்ணெய்க் காப்பு உத்ஸவம் தொடங்கியது.

இதையொட்டி, தினமும் காலையில் கள்ளழகா், கண்ணன், பெரியபெருமாள் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் ஆண்டாள் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை திருமுக்குள கரையில் உள்ள எண்ணெய்க் காப்பு மண்டபத்தில் ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், எண்ணெய்க் காப்பு சேவையும் நடைபெற்றன. தொடா்ந்து, சவுரி திருமஞ்சனமும், மூக்குத்தி சேவையும் நடைபெற்றன. இதன்பிறகு, கனக தண்டியில் ஆண்டாள் சந்நிதி திரும்பினாா்.

7-ஆம் நாளான புதன்கிழமை எண்ணெய்க் காப்பு உத்ஸவத்தில் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்கக் கவசம் அணிந்து எழுந்தருளினாா்.

வியாழக்கிழமை (ஜன.15) மணவாள மாமுனிகள் மங்களா சாசனமும், வெள்ளிக்கிழமை பெரிய பெருமாள் கணுப்பாரி வேட்டையும் நடைபெற உள்ளது.